சீனுக்கு வரும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.. 2 சம்பவங்கள் - தெற்கு + மேற்கு! பவர் காட்ட பவர் மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும் நவம்பர் 17 ஆம் தேதி கோவையில் அமைதிப் பேரணி மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திமுக தனது தேர்தல் அறிக்கையில், மாதம் ஒருமுறை மின் அளவீடு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தது.

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் மாதம் ஒருமுறை மின் அளவீடு முறையை அமல்படுத்த திமுக அரசு தயாராக இல்லை. இரண்டு வருட கரோனா கால தொடர் முடக்கத்தால் தொழில், வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின.

மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வு

அவைகள் மீட்சி பெறும் இந்த வேளையில் 30 முதல் 50 சதவிகித மின் கட்டண உயர்வை தமிழகத்தில் அமல்படுத்தி இருப்பது மீண்டும் தொழில், வணிக முடக்கத்திற்கே வழிவகுக்கும்; போதாக்குறைக்கு அடிக்கடி மின்வெட்டுக்களும் ஏற்படுகின்றன. மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு; மின் கட்டண உயர்வு ரத்து; தடையில்லா மின்சாரம் ஆகியவற்றை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக சென்னை, கோவையில் ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று விட்டன.

ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டங்கள்

அதன் தொடர்ச்சியாக நாளை நவம்பர் 2 - விருதுநகர், நவம்பர் 3 - தென்காசி, நவம்பர் 4 - திருநெல்வேலி, நவம்பர் 5- தூத்துக்குடி என 4 மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கின்றன. மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களில் நானே நேரடியாகவும் கலந்து கொள்கிறேன்.

கோவை

கோவை

மும்பைக்கு அடுத்தபடியாக கோவை மிகப்பெரிய தொழில் நகரமும், மாவட்டமும் ஆகும். தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என்ற பெயரும் கோவைக்கு உண்டு. 1998 ஆம் ஆண்டு கோவை மாநகர் மற்றும் பல புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட தொடர் வெடிகுண்டு விபத்துக்களால் பெரும் உயிரிழப்புக்களும், மிகப்பெரும் பொருளாதார சேதமும், அதைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் தொழில் மற்றும் வணிக வீழ்ச்சிகளும் ஏற்பட்டன.

கார் வெடிப்பு

கார் வெடிப்பு

இந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய நாள் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட கார் வெடிப்பு, அதில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், அதைத் தொடர்ந்து கார் வெடிப்பில் இறந்தவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட அதிநவீன வெடி பொருட்கள் ஆகியவை கோவை மாநகரை மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு இரையாக்கத் திட்டமிடப்பட்டது தெளிவாகிறது.

வெடிகுண்டு கலாச்சாரம்

வெடிகுண்டு கலாச்சாரம்

அதிர்ஷ்டவசமாக அன்றைய வெடி விபத்து எவ்விதமான உயிர், பொருளாதார சேதத்தையும் உருவாக்கவில்லை. ஒருவேளை அது வேறு இடத்தில் நிகழ்ந்திருந்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி, கோவை மாநகரின் அமைதியையும் சீர்குலைத்து இருக்கும். 1998 முதல் கோவை மாநகரம் தொடர்ந்து இது போன்ற வெடிகுண்டு கலாச்சாரத்தின் மையமாகத் திகழ்வதும் இன, மத மோதல்களுக்கு உண்டான தளமாகவும் களமாகவும் உருவாகி உள்ளது.

மோதல்கள்

மோதல்கள்

இது கோவை மாவட்டத்திற்கு மட்டுமே பாதிப்பை உண்டாக்கும் என்று கருதி விட முடியாது. இதனுடைய தொடர்புகள், தொடர்ச்சிகள் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கலாம். எனவே வெடிகுண்டு மற்றும் இன, மதக் கலவரங்களுக்குக் கோவை மாநகரை கேந்திரமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, கோவை மாநகரை அனைவரும் சந்தோசத்துடன், மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் வாழ்ந்திடும் தலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு கோவை மாவட்ட ஒவ்வொரு குடிமகனுக்கு உண்டு.

அமைதிப் பேரணி

அமைதிப் பேரணி

எனவே, கோவை மாநகரில் நிரந்தரமாக அமைதியை சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு நவம்பர் 17ஆம் தேதி கோவையினுடைய அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக் கூடிய வகையில் ஒரு அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி முழுக்க முழுக்க அரசியல், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கோவையின் பாரம்பரிய அமைதியையும், தொழில், வணிக செழுமையையும் மீட்டெடுக்கும் பொருட்டு நடைபெறக்கூடிய ஒரு மக்கள் இயக்கம் ஆகும்.

சமூக நல்லிணக்கம்

சமூக நல்லிணக்கம்

கோவையில் வாழக்கூடிய அனைத்து மக்களிடத்திலேயும் மத, இன ரீதியான எல்லா விதமான கசப்புணர்வுகளையும் அகற்றிவிட்டு; அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்வதற்கு உண்டான இடமாக அமைந்திட வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தை விதைப்பதற்கு எடுக்கப்படும் ஒரு பெரிய முயற்சி ஆகும். எனவே, இதில் பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மத அமைப்புகள் உட்பட அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+