ஓமந்தூரார் மருத்துவமனை சட்டப்பேரவையாகிறதா.. சபாநாயகர் அப்பாவு அளித்த பதில் இதுதான்!
சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவையாக மாற்றும் கேள்வி தற்போது வரை எழவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2006 முதல் 2011ம் ஆண்டு ஆட்சி காலத்தில் சட்டப்பேரவை கட்டிடமாக கட்டப்பட்டது தான் தற்போது உள்ள ஓமந்தூரர் அரசு மருத்துவமனை. 2010ம் ஆண்டில் சட்டப்பேரவை அலுவலகமாக மாறிய இந்த கட்டிடத்தை 2011ல் முதல்வராக பதவியேற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார் அதற்காக கட்டிடத்தின் உள்கட்டமைப்புகளும் மொத்தமாக மாற்றப்பட்டன.
இது தொடர்பாக ஓபிஎஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில். ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றவுடன், ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டிடம், சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக்கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இந்தக் கட்டிடம் இல்லை என்பதாலும், இருவேறு கட்டிடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டப்பேரவையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்துவிட்டு, அந்த இடத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியையும் உருவாக்கினார். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.

சட்டப்பேரவை மாற்றம்
இந்தச் சூழ்நிலையில், கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து, அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்ததையடுத்து, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டிடம் மீண்டும் சட்டப்பேரவையாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன.

ராமதாஸ்
இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனங்களிலும் எழுந்துள்ளது என்றார். ஓபிஎஸ் போலவே பாமக நிறுவனர் ராமதாசும் ஓமந்தூரர் மருத்துவமனையை மாற்றக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கலைவாணர் அரங்கம்
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற கலைவாணர் அரங்கம், ஜார்ஜ் கோட்டையில் இடம் உள்ளது ..
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

சபாநாயகர் பதில்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவையாக மாற்றும் கேள்வி தற்போது வரை எழவில்லை என்றும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு கூறினார். முன்னதாக தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் யூகத்தின் அடிப்படையிலான கேள்வி என்றும், அப்படி ஒரு திட்டம் இருப்பதாக தெரியவில்லை என்றும் மறுத்தார்.












Click it and Unblock the Notifications