தமிழக அரசே செலவை ஏற்கும்.. மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்.. மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்
தமிழக மாணவர்களை மீட்க, மத்திய அரசுக்கு ஆர்எஸ் பாரதி கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை விரைவாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.. இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்துள்ளது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. உக்ரைனில் போர் சூழலில், அங்கு ஏராளமான இந்தியர்களை சிக்கி கொண்டுள்ளனர்.
அவர்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என்று பிரதமர் மோடி உக்ரைன் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.. மத்திய அரசும் இதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

செலவு
அதேபோல் தமிழகத்தை சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறைக் கல்வி பயில்வோர் மற்றும் புலம் பெயர்ந்தவர்களும் உக்ரைனில் சிக்கி உள்ளனர். இந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயண செலவைத் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். மேலும், அங்கு சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக அணுகுமாறு தமிழக அரசும் அறிவித்திருந்தது.. அதற்கான உதவி எண்களையும் வெளியிட்டிருந்தது..

அலுவலர்கள்
சிக்கி உள்ள மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு, மாவட்ட, மாநில அளவில் மற்றும் டெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது... அத்துடன், தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக சென்னையில் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் அமைத்தது.. இந்த எண்ணுக்கு நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர்.. இன்றைய தினம் அந்த கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் வீடியோ காலில் பேசிய முதல்வர், அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

கடிதம்
இந்நிலையில், அம்மாணவர்களை உடனடியாக மீட்டு வரக்கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்எஸ் பாரதி கடிதம் எழுதியுள்ளார்... இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
"உக்ரைனில் நிலவி வரும் போர்ச் சூழலில் 5000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வரக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்எஸ் பாரதி
இதனையடுத்து, அக்கடிதத்தினை மேற்கோள் காட்டி, ஒன்றிய அரசு விரைவாக உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு உக்ரைனிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.ஆர்.எஸ். பாரதி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கோரிக்கை
மேலும் அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வருவதற்கு ஆகும் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கத் தயார் என முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளதையும் ஒன்றிய அரசுக்கு அவர் நினைவூட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக எழுதியுள்ள இக்கடிதத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பு பற்றி முதலமைச்சர் மிகுந்த கவலை அடைந்திருப்பதையும்; மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

நடவடிக்கை
இச்சூழலில், உக்ரைனில் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மாணவர்களை விரைவாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்" என்று அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications