கொரோனா என்றாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்... நம்பிக்கையூட்டும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
சென்னை: கொரோனா என்றாலே மரணம் என்ற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
நேர்மறையாக சிந்திக்கவேண்டுமே தவிர எப்போதும் எதிர்மறையாக சிந்திப்பதை கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸின் இந்தக் கருத்து மக்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கும் வகையில் உள்ளது.
எத்தனை அவமானங்கள்! மாஜி பிரதமர் பி.வி. நரசிம்மராவ் நூற்றாண்டு விழா இன்று : கே.எஸ். ராதாகிருஷ்ணன்
கொடியது
கொரோனாவை காட்டிலும் கொடியதாக அது தொடர்பான வதந்திகளும், வாட்ஸ் அப் தகவல்களும் மக்களை பீதியடைச் செய்து வருகின்றன. இதனால் கொரோனா என்றாலே மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற எதிர்மறை சிந்தனைக்கு தள்ளப்பட்டு பலரும் மன அழுத்தம் உள்ளிட்ட வியாதிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இன்னும் சிலர் கொரோனா தொற்று உறுதி என முடிவு வந்தால் தற்கொலை வரை சென்று விபரீத முடிவுகளை தேடிக்கொள்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
உலகத்தில் கொரோனா வந்தவர்கள் அனைவரும் மரணம் அடையவில்லை என்பதையும், கொரோனாவுக்கு முன்பாக ஏற்கனவே பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவபர்களில் சிலரே மரணம் அடைந்துள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைவிடுத்து கொரோனா இருப்பதாக கூறினாலே வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணத் தேவையில்லை. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆகரங்களை அதிகப்படுத்தி கொரோனாோ ஓட ஓட விரட்ட முடியும்.
நம்பிக்கை வார்த்தை
இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஆய்வு செய்துவிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கொரோனா என்றாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள் என பொதுமக்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சளி, காய்ச்சல் போன்ற மற்ற வைரஸை போன்று இதையும் நம் உடலில் இருந்து விரட்ட முடியும் என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
தீவிர கவனம்
தமிழக அரசை பொறுத்தவரை கொரோனாவால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்பதில் மிகத் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா குறித்த வதந்திகளையும், பீதியையும் புறந்தள்ளி நோயை வெல்வோம் என்ற தன்னம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைப்பது அரசின் கடமையாகிறது.