பாவம் அவரே கன்பியூஸ் ஆகிடாரு! ராகுல் ஒன்னு சொல்ல சம்பந்தமே இல்லாமல் வந்த மொழிபெயர்ப்பு! செம குழப்பம்
சென்னை: சோளிங்கர் தேர்தல் களத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக முழங்கிக்கொண்டிருக்க, அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளரோ ராகுலின் 'வேகத்திற்கு' ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சுகளில் மொழிபெயர்ப்பு சொதப்புவது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றாலும், இந்த முறை மிக முக்கியமான சில அரசியல் 'பஞ்ச்'கள் அப்படியே காற்றில் பறக்கவிடப்பட்டன.
ராகுல் காந்திக்குத் தமிழ்நாட்டில் பெரியளவுக்கு மரியாதையும் செல்வாக்கும் இருப்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் வந்து பிரச்சாரம் செய்யும்போது அவருக்காகவே கூட்டமும் கூடும். ஆனால், ராகுல் காந்திக்கு எப்போதும் இங்கு ஒரு பிரச்சினை என்றால் மொழிபெயர்ப்பு தான்.. கடந்த காலங்களிலும் இது ஏகத்திற்கு ட்ரோல் ஆகியுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி மிகவும் எமோஷ்னலாக எதாவது ஒன்றைப் பேசுவார்.. ஆனால், சம்பந்தமே இல்லாமல் மொழி பெயர்ப்பு வரும். இன்றைய தினமும் சோளிங்கரில் நடந்த கூட்டத்தில் இப்படி தான் மொழி பெயர்ப்பில் ஏக பிழைகள் வந்தது.
பேச்சின் தொடக்கத்திலேயே ராகுல் காந்தி, "மோடியும் அமித் ஷாவும் ஒட்டுமொத்த தேசத்திடமும் பொய் சொல்கிறார்கள்" என்றார். ஆனால் மொழிபெயர்ப்பில் சம்பந்தமே இல்லாமல் "அவர்கள் இந்த தேசம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது எனச் சொல்கிறார்கள்" என்றார். மேலும், மகளிர் மசோதா குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "Hidden behind that bill was a diabolical idea" என்றார். இதில் 'Diabolical' என்ற வார்த்தைக்கு 'மிகவும் கொடுமையான' என்று பொருள். ஆனால் மொழிபெயர்ப்பாளரோ, "உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள்" என முடித்துக் கொண்டார்.. ராகுல் அந்த வார்த்தையின் மூலம் வெளிப்படுத்திய ஆக்ரோஷம் மிஸ்ஸிங்!
சம்பந்தமே இல்லை
அடுத்து தமிழ் மொழி குறித்துப் பேசும்போது, "தமிழ் போல வரலாற்றுச் சிறப்பு மொழிகளைக் கொண்டது இந்தியா" என்றார். ஆனால், மொழிபெயர்ப்பில் சம்பந்தமே இல்லாமல், "மொழிகளால் பிணைக்கப்பட்டது" என்றார். மேலும், தமிழ் மொழியின் பெருமை பற்றிப் பேசும்போது, "Tamil is the soul of the Tamil people... Tamil is the mother"** என்று உணர்ச்சிவசப்பட்டார் ராகுல். 'தமிழ் என்பது உங்கள் ஆன்மா, உங்கள் தாய்' என ராகுல் உருக்கமாகச் சொன்னதை, மொழிபெயர்ப்பாளர் ஏதோ ஒரு பள்ளிக்கூடக் கட்டுரையை வாசிப்பது போல "தமிழ் மொழி சிறப்பானது" என்ற அளவில் கடந்து சென்றார்.
அடுத்து அதிமுக குறித்துப் பேசும்போது ஏக குழப்பம்.. தமிழ்நாடு டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடாது என்றும் தமிழர் ஒருவரே தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டார். ஆனால், அதற்குச் சம்பந்தமே இல்லாமல்.. "நான் நம்புகிறேன்.. காங்கிரஸ் நம்புகிறது.. அது நடக்க வாய்ப்பில்லை.." என்று சம்பந்தமே இல்லாமல் ஏதோ சொன்னார்.
இப்படி பேசுனா எப்படி
Delimination, அதாவது தொகுதி மறுவரையறை குறித்தும் ராகுல் பல முக்கிய கருத்துகளைக் கூறினார். தொகுதி மறுவரையறையை பாஜக ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றும் நாட்டின் தேர்தல் வரைபடத்தையே மாற்ற முயல்கிறார்கள் என ராகுல் சாடினார். ஆனால், தொகுதி மறுசீரமைப்பு என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் இந்த மொழிபெயர்ப்பு முடிந்திருந்தது.
தொடர்ந்து பிரதமர் மோடி மீது கடுமையான விமரிசங்களை முன்வைத்தார் ராகுல்.. பிரதமர் நம்பிக்கையற்று இருந்தார் என ராகுல் சொல்ல.. பிரதமர் நம்பிக்கையோடு இருந்தார் என மொழிபெயர்த்தார். அப்போது ராகுல், "பிரதமர் மோடியால் எதிர்க்கட்சியை எதிர்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவரை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது" என்றார். ஆனால், "எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்து உள்ளதால் பிரதமர் பயந்துவிட்டார் எனத் தமிழில் பெயர்த்தார்.
அமெரிக்கா என்ற வார்த்தையே இல்லை
இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்கள் என்றும் டிரம்ப் குதிக்கச் சொன்னால் மோடி கண்ணை மூடி கொண்டு குதித்துவிட்டார் என்றும் காட்டமாக விமர்சித்தார். ஆனால், மொழி பெயர்ப்பில் கடைசி வரை டிரம்ப் என்றோ அமெரிக்கா என்றோ வார்த்தை கூட வரவில்லை.
மேலும், உரையின் முடிவில் மக்கள் ராகுல்.. ராகுல்.. என உற்சாகக் குரல் எழுப்ப, நெகிழ்ந்து போன ராகுல் காந்தி, "I love you also" என்றார். இது அப்படியே விட்டிருக்கலாம்.. அனைவருக்கும் புரிந்திருக்கும். இவ்வளவு நேரம் சொதப்பியது பத்தாது என அந்த இடத்திலும் வந்து தனது 'ரொட்டீன்' வேலையைச் செய்து, "மிக்க நன்றி, வணக்கம்" என்று முடித்தார்.
ராகுலுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் ஏக பிரச்சினைகள் தொடரும் சூழலில், அது இன்றும் தொடர்ந்துள்ளது. சோளிங்கர் கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் செய்த தவறுகள், ராகுலின் பல 'அக்னிச் சிறகுகளை' வெறும் காகிதங்களாக மாற்றிவிட்டன. ராகுல் காந்திக்கு ஒரு தேர்ந்த 'தமிழ்' மொழிபெயர்ப்பாளர் கிடைப்பது எப்போது என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.














Click it and Unblock the Notifications