சென்னையில் 39 மதுபான கடைகளை தூக்குங்க.. டாஸ்மாக்கிற்கு ரயில்வே போலீசார் திடீர் கடிதம்!
சென்னை: ரயில்களில் நடைபெறும் குற்ற செயல்களுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் முக்கிய காரணமாக ரயில்வே போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதால் 39 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ரயில்வே கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் சமீப காலமாக ரயில்கள் மீது கல் வீசுதல், பயணிகளிடம் திருட்டு போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் புறநகர் மின்சார ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில்கள்தான் பயணிகளுக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

சென்னையில் தாம்பரம் - கடற்கரை, சென்ட்ரல் - அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் 200 க்கும் மேல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினம் தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக பயணிகளிடம் திருட்டு பொன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இது ரயில்வே போலீசாருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
ரயில்களில் இப்படி தொடர்ந்து நடைபெறும் குற்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே, ரயில்களில் நடைபெறும் இந்த குற்ற செயல்களுக்கு என்ன காரணம்? என போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ரயில்களில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகள், பார்கள்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரயில்வே சார்பில் அண்மையில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள மின்சார ரயில் நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள 39 டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கடைகள் சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் பகுதிகளில் இருக்கின்றன.
பெரும்பாலான கல்வீச்சு சம்பவங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் தொடர்புடைய இடங்களில் இருந்து பதிவாகியுள்ளது. சில நேரங்களில், ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடக்கும் நபர் அருகில் உள்ள மதுபான பார்களில் மது அருந்திவிட்டு, தண்டவாளத்தைக் கடக்க முற்படும் போது ரயிலில் அடிபட்டு விபத்தில் சிக்குவது தெரியவந்தது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தீர்வாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications