நெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதியன்று உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கூடிய கன முதல் மிக மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கர்நாடகா, தமிழ்நாடு, கோவா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் வரை கடந்த சில மாதங்களாவே பருவமழை கொட்டித்தீர்த்தது.
பருவமழையின் தீவிரத்தால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் குலாப் புயல் கரையைக் கடந்ததன் காரணமாக கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் பலத்தமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

குமரி, நெல்லையில கனமழை
வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 30 ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மழை அடி தூள்
அக்டோபர் 1ஆம் தேதியன்று தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அக்டோபர் 2ஆம் தேதியன்று உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கூடிய கன முதல் மிக மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

வானம் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்
மழை அளவு விபரம்
கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் (கோவை) 13, வால்பாறை (கோவை), சோலையாறு (கோவை) தலா 8, சின்கோனா (கோவை) 7, பந்தலூர் (நீலகிரி) 5, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி) 4, சேலம் (சேலம்), பெரியாறு (தேனி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 3, மங்களபுரம் (நாமக்கல்), ஆத்தூர் (சேலம்), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 2, வேப்பூர் (கடலூர்), எடப்பாடி (சேலம்), வடக்குத்து (கடலூர்) தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

பலத்த காற்று வீசும்
இன்று தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த காற்றழுத்தம் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications