தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் முதல் தெலுங்கானா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் அதிகப்பட்சமாக மழை பதிவாகி உள்ளது என்றும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழையில்லாமல் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் உப்புநீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல், கண்மாய், கிணற்று நீரை குடிக்கின்றனர். இதனால், குடிநீரை ரூ.12க்கு விலைக்கு வாங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.