ஸ்டெர்லைட்.. போலீசாரிடமும், ரஜினிகாந்த்திடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது- அருணா ஜெகதீசன் பேட்டி
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில், ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த உள்ளதாக விசாரணை ஆணைய தலைவரும், முன்னாள் நீதிபதியுமான அருணா ஜெகதீசன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பொது மக்கள் பலியாகினர். 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 14ம் தேதி தனது இடைக்கால அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் அருணா ஜெகதீசன் வழங்கினார்.
மூன்று உத்தரவுகள்
இந்த பரிந்துரையை ஏற்று, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ், பாதிக்கப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம், கல்வி, வேலைவாய்ப்புக்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என்ற 3 முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பிறப்பித்தார்.
லாக்டவுனால் தாமதம்
இந்த உத்தரவுகளை வரவேற்று பேட்டியளித்த அருணா ஜெகதீசன் மேலும் கூறியதாவது- எப்போது விசாரணை முடியும் என்ற கேள்வி என்னிடம் முன் வைக்கப்படுகிறது. இந்த மாதமே, விசாரணைக்கு சிட்டிங் ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் லாக்டவுனால் அது தள்ளிப்போயுள்ளது.
காவல்துறையிடம் விசாரணை
காவல்துறையினரிடம் நடத்த வேண்டிய விசாரணைதான் மிச்சமுள்ளது. பொது மக்களிடம் நடத்த வேண்டிய விசாரணை நிறைவடைந்து விட்டது. எனவேதான் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தேன். விரைவில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
உயர் அதிகாரிகள்
அதேநேரம், காவல்துறையில் 250 பேரிடம் விசாரணை நடத்த தேவையுள்ளது. இதில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் உள்ளனர். முடிந்த அளவுக்கு வேகமாக விசாரணையை முடிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்தப்படும்
ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாக கூறிய ரஜினிகாந்த்திடம் அது தொடர்பாக விளக்கம் கேட்க வேண்டியுள்ளது. பெருந்தொற்று காலம் என்பதால், இப்போது ரஜினிகாந்த்திடம் விசாரிக்க முடியவில்லை. நிலைமை சரியானதும் ரஜினிகாந்த்திடம் விசாரிக்கப்படும். இவ்வாறு அருணா ஜெகதீசன் தெரிவித்தார்.