பட்டினி, ஷாக் ட்ரீட்மெண்ட்.. கம்போடியாவில் 400 தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை - மீட்க கோரும் ராமதாஸ்
சென்னை: கம்போடியா நாட்டில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், புரூணை, ஆஸ்திரேலியா என பல உலக நாடுகளில் ஏராளமானோர் சென்று பணிபுரிந்து வருகின்றனர்.
இப்படி பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் சில டிராவல்ஸ் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் சொன்ன வேலைக்கு மாறாக கடினமான, சட்டவிரோதமான பணிகளுக்காக அவர்களை அனுப்பி வருகின்றனர்.
தமிழர்களை மீட்கும் நடவடிக்கை! நீங்கள் தலையிட வேண்டும்! பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
400 தமிழர்கள்
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் தாய்லாந்தில் வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் 13 பேர் மீட்கப்பட்டு இருக்கும் சூழலில், கம்போடியாவில் 400 தமிழர்கள் இதேபோல் சிக்கி இருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமதாஸ் அறிக்கை
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ராமதாஸ், "கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 பேர் அங்குள்ள சட்டவிரோத கும்பலிடம் சிக்கி இருப்பதாகவும், பட்டினி, உடலில் மின்சாரத்தை பாய்ச்சுதல் உள்ளிட்ட கொடுமைகளை அவர்கள் அனுபவிப்பதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்த இளைஞர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கொடுமை
தாய்லாந்தில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மியான்மருக்கு கடத்தி கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தமிழர்களில் இதுவரை 13 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக கம்போடியாவிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கடத்தல் தொழில்
பல லட்சம் பணம் செலுத்தி வேலை தேடி கம்போடியாவுக்கு சென்ற தமிழர்களை, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரே சட்டவிரோத கும்பலிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. வேலை தருவதாகக் கூறி தமிழர்களை அழைத்து, கடத்தி விற்பதை ஒரு கும்பல் தொழிலாகவே செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.
அச்சம்
தமிழர்களை கடத்தி வைத்துள்ள சட்டவிரோத கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அவர்களிடம் பேச அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அஞ்சுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள், அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
மீட்க வேண்டும்
கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும். அவர்களை இங்கிருந்து அனுப்பியவர்கள், சட்டவிரோத கும்பலுக்கு விற்றவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்." என்று வலியுறுத்தி இருக்கிறார்.