இனி “இந்தி” திணிப்பே கூடாது.. காரைக்கால் FMல் “நோ” இந்தி! பாமக போராட்ட எச்சரிக்கையின் பயன் - ராமதாஸ்
சென்னை: காரைக்கால் வானொலி நிலைய எஃப்.எம்-இல் கடந்த 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காரைக்கால் வானொலி நிலையத்தின் எஃப்.எம்.-இல் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.-52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி, தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு. காலை 9 - 10, மாலையில் 3 - 5 மணி வரை, இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.
ஒரு செல்பி 23,000 ரூபாய்! விராட் கோலி கிட்ட சென்று.. மிரள வைத்து வெறித்தனமான ரசிகர்! அடடே பாருங்க
இந்தி நிகழ்ச்சிகள்
இதன் மூலம் காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனால் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வழுத்தன.
நிகழ்ச்சிகள் ரத்து
காரைக்கால் வானொலில் இந்தி நிகழ்ச்சியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார். இந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக காரைக்கால் வானொலை பன்பலை சேவையில் 4 மணி நேரம் ஒலிபரப்படும் இந்தி நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக பிரசார் பாரதி அறிவித்து உள்ளது.
ராமதாஸ் கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மகிழ்ச்சி
காரைக்கால் வானொலி மூலமான இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது கைவிடப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து இந்தி நிகழ்ச்சிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தி திணிப்பு கூடாது
வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் இந்தித் திணிப்பு முயற்சிகளில் பிரசார் பாரதி நிறுவனம் ஈடுபடக்கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார்.