மிரட்டல்; உருட்டல்.. எல்லை மீறிய தனியார் நிதி நிறுவன குண்டர்கள்.. விவசாயி தற்கொலை.. ராமதாஸ் வேதனை..!
சென்னை: கடனை வசூலிக்கிறோம் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவன குண்டர்கள் எல்லை மீறி செயல்பட்டதால் அப்பாவி விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது.
தனியார் நிதி நிறுவனம் அளித்த நெருக்கடி, அவமானம், வீட்டிற்கு குண்டர்களை ஏவி விட்டது, போன்ற காரணங்களால் விவசாயி மனோகரன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில் இது போன்ற நிகழ்வை இனியும் பாமக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என எச்சரித்துள்ள ராமதாஸ், தனியார் நிதி நிறுவனங்களை அரசு வரைமுறைப்படுத்தி கடிவாளம் போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள வேதனை பதிவில்;
கண்டனம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வேளாண் கடன் தவணையை செலுத்தத் தவறியதற்காக தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதைத் தாங்கிக் கொள்ள முடியாத மாற்றுத் திறனாளி விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வருமானம் இல்லாமல் வாடிய உழவரை தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியது கண்டிக்கத்தக்கதாகும்.
மரியாதை குறைவு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்ற மாற்றுத்திறன் விவசாயி அவரது உறவினர் இராமகிருஷ்ணன் பெயரில் தனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் வாங்குவதற்காக ரூ. 2 லட்சத்து 11,734 கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.43,380 கடன் நிலுவை உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மனோகரனுக்கு போதிய வருவாய் இல்லாததால் கடன் நிலுவைத் தொகையை சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மனோகரனின் வீட்டுக்குச் சென்று மரியாதைக்குறைவாக பேசியுள்ளனர். கடன் தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கும்படி அவர் விடுத்த வேண்டுகோளை தனியார் நிதி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மிரட்டல்
மாறாக, கடன் தவணையை செலுத்தாதற்காக டிராக்டரை பறிமுதல் செய்வது மட்டுமின்றி, வீட்டையும் ஜப்தி செய்வோம் என்று தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் நேற்று முன் நாள் புகார் அளித்த மனோகரன், கடன் தவணையை செலுத்த அவகாசம் கேட்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
தகாத வார்த்தை
ஆனால், அவருக்கு கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க மறுத்து விட்ட அதன் அதிகாரிகள், அங்கும் மனோகரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த மனோகரன், தனியார் நிதிநிறுவன வாசலிலேயே நஞ்சு குடித்து சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பயனின்றி நேற்று உயிரிழந்து விட்டார்.
டிராக்டர் கடன்
டிராக்டர் வாங்குவதற்காக வேளாண் கடனை 2019-ஆம் ஆண்டில் வாங்கிய மனோகரன் அப்போது முதல் கடன் தவணையை சரியாக செலுத்தி வந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் தான் அவரால் கடன் தவணையை செலுத்த முடியவில்லை. அதை அவர் நேர்மையாக ஒப்புக்கொண்டு கூடுதல் அவகாசம் கேட்டிருக்கிறார். கொரோனா பாதிப்பால் கடன் தவணை செலுத்த முடியாதவர்களுக்கு குறைந்தது 6 மாத அவகாசம் வழங்கும்படி உச்சநீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. சட்டங்களையும், விதிகளையும் மதித்து மனோகர் கடன் தவணை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார்.
தண்டனை தேவை
கடன் தவணையை மனோகரனால் செலுத்த முடியவில்லை என்றால் கூட, அதற்காக அபராதமோ, கூடுதல் வட்டியோ வசூலிக்கலாமே தவிர, வாகனத்தை பறிமுதல் செய்யவோ, அவரை தகாத வார்த்தைகளால் திட்டவோ தனியார் நிதி நிறுவனங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வழங்கிய பல தீர்ப்புகளில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மனோகரனை கடுமையாகத் திட்டியதன் மூலம் அவர் தற்கொலை செய்வதற்கு தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் தூண்டி உள்ளனர். மனோகரனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
தற்கொலைக்கு காரணம்
கடந்த சில ஆண்டுகளில் தனியார் நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் இழைத்த கொடுமைகள் மற்றும் அவமானங்கள் காரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூரில் தொடங்கி மாநிலம் முழுவதும் ஏராளமான உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் கொடுத்து விட்டு அடியாட்களை அனுப்பி மிரட்டுவது, கடன் பெற்றவர்களை தரக்குறைவாகப் பெசி அவமானப்படுத்துவது ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது தான் தற்கொலைகளுக்கு காரணமாகும்.
இழப்பீடு
தனியார் நிதி நிறுவனங்கள் அளிக்கும் நெருக்கடிகள், இழைக்கும் அவமானங்கள் காரணமாக இனியும் ஒரு உழவர் கூட தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் தனியார் நிதி நிறுவனங்கள் முறைப் படுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி உழவர் மனோகரனின் தற்கொலைக்கு காரணமாக தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறன் விவசாயி மனோகரனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.