2017 சாம்பியன்ஸ் டிராபி டூ 2022 உலகக்கோப்பை.. அஸ்வின் கொடுத்த மாஸ் கம்பேக்.. எப்படி சாதித்தார்?
சென்னை: 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து அஸ்வின் ஓரம்கட்டப்பட்ட நிலையில், டி20 உலகக்கோப்பையில் பிரதான பந்துவீச்சாளராக கம்பேக் கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதில் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் சஹாலுக்கு பதிலாக இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் 5 நாள்.. நெருங்கும் இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை! நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய “3 மேட்டர்”
2017 சாம்பியன்ஸ் டிராபி
2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியதற்கு பின், இந்திய அணியில் இருந்து அஸ்வின் ஓரம்கட்டப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்துவீச்சாளர்களான சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வந்த பின்னர் இந்திய அணிக்கு வெற்றிகள் கிடைத்தாலும், தோனியின் ஓய்வுக்கு பின்னர் இருவருமே அதிக தடுமாற்றத்தை சந்தித்தனர்.
சஹால், குல்தீப் யாதவ்
இதன் காரணமாக சஹால் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கடந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்கும் அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் சஹர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரை இந்திய அணி பரிசோதித்து பார்த்தது. ஆனால் அதற்கான பலன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை.
மீண்டு வந்த அஸ்வின்
இதனைத் தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதும், ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அன்று முதல் அவ்வப்போது இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டு வந்தார். அதற்கு அவரின் ஐபிஎல் ஆட்டமே காரணமாக அமைந்தது. குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு துல்லியமாக பந்துவீசுவதும், அவரின் எகானமியின் முக்கிய காரணமாக இருந்தது.
அஸ்வினின் கம்பேக்
வெறும் 6.8 எகானமியோடு இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஐபிஎல் தொடரில் வீசியது அவ்வளவு சாதாரணம் இல்லை. அவரது முயற்சிக்கும் உழைப்பிற்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தாலும், பிரதான பந்துவீச்சாளராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் உச்சப்பட்ட பிரஷர் ஆட்டமான பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எகானமி முக்கியம்
டி20 வகை கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு, ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். அந்த வகையில் ரன்களை கட்டுப்படுத்துவதில் அஸ்வின் கில்லாடியாகவே இருந்து வருகிறார். இதுவே அஸ்வின் தேர்வுக்கு முக்கியமாக காரணமாக உள்ளது. ஐசிசி தொடரில் ஒரு போட்டியில் மட்டும் சரியாக விளையாடாததால், அணியில் இருந்து ஓரம்கட்ட அஸ்வின், மற்றொரு ஐசிசி தொடரில் கம்பேக் கொடுத்துள்ளது பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.