21 தொகுதிகளில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அனைத்து லோக்சபா, சட்டசபை தொகுதிகளிலும், ஏதாவது ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட அந்த வாக்குச் சாவடியில், சீட்டில் பதிவான வாக்குகளும் இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு ஒப்பிடப்படுகின்றன.
அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது என்பதற்காக, இதை ஒவ்வொரு தொகுதியிலும் 50% பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன.இது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மனு அளித்தன.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
எதிர்வரும் லோக்சபா பொதுத் தேர்தலின்போது விவிபாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல் பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்நிலையில், ஒப்புகைச் சீட்டு இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தொடக்கி வைத்தார்.
செயல்முறை
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அவர் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
இது போன்ற செயல்முறை விளக்கம் வழியாக, பாதுகாப்பான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது எப்படி குறித்து வாக்காளர்களுக்கு விளக்கப் படுகிறது. மொத்தம் 10 நாட்கள் தமிழகம் முழுவதும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தேர்தலை நடத்த தயார்
தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளன.
தகவல் அனுப்புவோம்
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி செயல்படுவோம். ஓசூர் தொகுதியாக காலியாக உள்ளது என்று சட்டசபை செயலாளர் அறிவித்தால் தான்.... நாங்கள் தலைமை தேர்தல்ஆணையத்துக்கு தகவல் அனுப்புவோம் என்று கூறினார்.