பட்டினப்பிரவேசத்தை பாஜக நடத்திக்காட்டும்.. ஆதீனத்தை தோளில் சுமக்கத் தயார்... அண்ணாமலை அதிரடி
ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று தமிழக பாஜக தமிழகத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: தருமபுர ஆதீன நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தமிழக பாஜக தயாராக இருக்கிறது என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்ற பின்னர் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனம் அமர்ந்து வீதி உலாவந்தார். அந்த பல்லக்கை அதற்காக ஆதீனத்தில் உள்ள மக்கள் சுமந்து வந்தார்கள். இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

கோட்டாட்சியர் தடை
ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திராவிடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு
மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். காலங்காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி குருவிற்கு நாங்கள் அளிக்கும் மரியாதை அதை மாற்றக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மதுரை ஆதீனம் எதிர்ப்பு
பட்டினப்பிரவேச நிகழ்ச்சி பாரம்பரியம் மிக்கது அதற்கு தடை விதித்தது வருத்தம் அளிப்பதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஞனசம்பந்த தேசிகர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இப்படி பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் தருமபுர ஆதீனம்தான். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வர் வந்து நடத்த வேண்டும். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். முதல்வர் உடன்படவில்லை என்றால் அந்த சொக்கநாதரிடம் கோரிக்கை வைப்பேன் என்று கூறினார். உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப்பிரவேசத்தை நடத்துவேன் என்று கூறினார். எனது குருவிற்கு நானே பல்லக்கு சுமப்பேன் என்றும் தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டினப்பிரவேசத்தை பாஜக நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான 'பட்டின பிரவேசம்' மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தயார்
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தருமபுர ஆதீன நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தமிழக பாஜக தயாராக இருக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications