விடாமல் கொட்டும் மழை.பரிதவிக்கும் தலைநகர்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
சென்னை: கடந்த மாதம் சென்னையில் பேய்மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களளும் வெள்ளகாடாக காட்சியளித்தது. சில பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியது.
Recommended Video
இதனால் மழையை கண்டாலே சென்னை மக்கள் அச்சம் கொள்ளும் நிலையில் சென்னையில் இன்று 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம், என பல்வேறு நகர்ப்புற பகுதியிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது.

மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
இதனால் சென்னையின் பல இடங்களில் சாலையில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரதான சாலையான அண்ணாசாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடுகிறது. பல்வேறு சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டடு ஓடுகிறது.

எதிர்பார்த்ததை விட அதிக மழை
பலத்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1 கிலோ மீட்டரைக்கடக்க 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பணி முடிந்து இல்லம் திரும்புவோர் கடும் அவதி அடைந்துள்ளனர். இப்படியான திடீர் கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையமே எதிர்பார்க்கவில்லை. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துளளார்.

எம்.ஆர்.சி. நகரில் 18 செ.மீ மழை
தமிழக கடற்கரையோரம் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வருவதாகவும்,
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக நிலப்பகுதி நோக்கி வேகமாக நகந்ததால் அதிக மழை பெய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் மட்டும் 18 செ.மீ மழை கொட்டியுள்ளது

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்(அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications