விடாமல் கொட்டி தீர்க்கும் மழை.. நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு 'ரெட் அலர்ட் 'எச்சரிக்கை!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையில் பலத்த மழை கொட்டியதால் சென்னை புறநகர் வெள்ளக்காடானது.
Recommended Video
பல நாட்களாக சென்னையில் வெள்ளம் வடியாத நிலையில் தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கியது.

வெளுத்து வாங்கிய மழை
நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டது. மழை காரணமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் மார்க்கமாக சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டு தற்போது நிலைமை சீரடைந்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

தூத்துக்குடியில் பேய் மழை
இந்த நிலையில் தற்போதும் தமிழகத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து கட்டியது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

திருச்செந்தூரில் மட்டும் 20 செ.மீ
கடந்த 8 மணி நேரத்தில் திருச்செந்தூரில் மட்டும் 20 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. பலத்த மழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது. திருச்செந்தூர் பகுதி மற்றும் ஆறுமுகநேரி என பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை பெய்தபோதும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
மழை இடைவிடாமல் பெய்ததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல பகுதிகளில் பள்ளிகளில் மதியத்துக்கு மேல் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்( அதி கனமழை பெய்யும்) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தயார் நிலை
இந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஆரஞ்சு அலர்ட் அலர்ட்( கனமழை பெய்யும்) என கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை பெய்யும் என்பதால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விழிப்புடன் உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications