கொடிக் கம்பங்களை அகற்றும் வழக்கு.. ஹைகோர்ட்டில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜர்
சென்னை: இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு திருப்பூர் மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், இந்து கோட்பாடுகளுடன் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி திருப்பூர் முழுவதும் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அமைத்துள்ளனர் விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நடைபாதைகளில் இந்த கொடிக்கம்பங்களை நட்டுள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திருப்பூர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களை எந்த அனுமதியும் பெறாமல் இந்து முன்னணியினர் வைத்துள்ளனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், உத்தரவிற்கு முரணாக திருப்பூரில் இந்து முன்னணியினர் கொடிக்கம்பங்களை வைத்துள்ளனர். இந்த கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி கடந்த ஜூன் 12 ல் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, திருப்பூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை கடந்த முறை விசாரணைக்கு வசாரித்த நீதிமன்றம் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தனர்
அதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள சுமார் 453 கொடிக்கம்பங்கள் அகற்றி விட்டதாகவும் மேலும் மீதம் உள்ளதை அகற்ற கால அவகாசம் கேட்டகபட்டதால் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 10ஆம் தேதியன்று ஒத்திவைத்தனர்.