"பெரியார், முத்துராமலிங்க தேவர், வாஞ்சிநாதன்.." தமிழக அரசு குடியரசு தின விழாவில் 2 புதிய ஊர்திகள்
சென்னை: தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் மத்திய அரசு குழுவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய 2 ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 73ஆவது குடியரசு தின விழா வரும் ஜன. 26ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநில அரசு சார்பில் ஊர்திகள் அனுப்பப்படுவது வழக்கம்.
சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி
அதன்படி இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், பாரதியார், வேலு நாச்சியார் உள்ளிட்டோரை உலக நாட்டுத் தலைவர்களுக்குத் தெரியாது என்று தமிழக அரசிடம் இதற்கு அமைக்கப்பட்ட குழு தெரிவித்ததாக வெளியான தகவல் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்லி குடியரசு தின விழாவில் மறுக்கப்பட்ட ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு ஊர்தியாகப் பங்கேற்கும் என்றும் அவை தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
புதிய ஊர்தி
குடியரசு தின விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஊர்திகளைத் தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை குடியரசு விழாவுக்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த 2 ஊர்திகளுடன் மேலும் இரண்டு புதிய ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக மொத்தம் 4 ஊர்திகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு
"விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு" என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த ஊர்தி அணிவகுப்பில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட தலைவர்களின் சிலைகள் இடம்பெற உள்ளன. சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் இந்த ஊர்தி வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மங்கள இசை, வள்ளுவர் கோட்டம், பரத நாட்டியம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கம் ஆகியவை முதல் ஊர்தியில் இடம் பெற்றுள்ளன.
கட்டபொம்மன், வ.உ சிதம்பரனார்
அதேபோல முதல் சுதந்திரப் போராட்டமாக அறியப்படும் சிப்பாய் புரட்சியைப் போற்றும் வகையில் வேலூர் கோட்டை, காளையார் கோவில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி, வீர பாண்டிய கட்டபொம்மன், பூலி தேவன், அழகு முத்து கோன், ஒண்டி வீரன் சிலைகள் இரண்டாவது ஊர்தியில் இடம் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, விஜய ராகவாச்சாரியார் ஆகியோரின் சிலைகளும் சுதேசி கப்பல் மாதிரி வடிவமும் 3ஆவது ஊர்தியில் இடம் பெற்றுள்ளன.
புதிய ஊர்தியில் பெரியார், முத்துராமலிங்க தேவர் சிலைகள்
அதைத் தொடர்ந்து தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள 4ஆவது ஊர்தியில் தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், ராஜாஜி, வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, ரெட்டை மலை சீனிவாசன், திருப்பூர் குமரன், வ.வே.சு ஐயர், காயிதே மில்லத், ஜெ.சி குமரப்பா, கக்கன் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. குடியரசு தின விழாவுக்குப் பின்னர் இந்த 4 ஊர்திகளையும் தமிழகம் முழுக்க பொதுமக்கள் பார்வைக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.