ஆருத்ரா மோசடி பணம் ரூ.500 கோடியை அங்க பதுக்கி வச்சிருக்காங்களாமே! ஆர்.கே.சுரேஷுக்கு மீண்டும் சம்மன்!
சென்னை: ஆருத்ரா மோசடியில் தலைமறைவாக உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். இண்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கியுள்ள ஆருத்ரா நிறுவன இயக்குநர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடி கோடியாக பணம் பெற்றுவிட்டு கம்பி நீட்டியது. இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து பணத்தைப் பறிகொடுத்தனர்.

ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். மாநில பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு ஹரீஷ் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆருத்ரா மோசடியில் பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.
ஆருத்ரா நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்ற்வாளிகளான ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், மகாலட்சுமி, மைக்கேல் ராஜ், நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாகி இருப்பதால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
மேலும் நிதி நிறுவனம் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை துபாய் நாட்டில் பதுக்கி வைத்திருப்பதால் அதை மீட்க துபாய் நாட்டு அரசாங்கத்துடன் எம்.லாட் எனும் பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படையில் மத்திய அரசு மூலமாக கடிதம் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மோசடி செய்யப்பட்ட 500 கோடி ரூபாயை துபாய் நாட்டில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை மோசடி செய்யப்பட்ட பணம் மூலம் வாங்கப்பட்ட 127 சொத்துக்களைக் கண்டறிந்து, அதில் 60 சொத்துக்களை முடக்கி உள்ளதுடன் 102 கோடி வங்கி கணக்கை முடக்கி, 6.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துபாயில் பதுங்கியுள்ள நடிகர் ஆர்.கே சுரேஷ் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். இன்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கியுள்ள ஆருத்ரா நிறுவன இயக்குநர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆருத்ரா இயக்குநர்கள் சிக்கினால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பல அரசியல் புள்ளிகள் யார் என்பது குறித்தும் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications