3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக வரும் சனிக்கிழமை ஆ. என் ரவி பதவி ஏற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டின் 14-வது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்று 4 மாதங்களில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், புலனாய்வு அதிகாரியுமான நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதே ஆளுநர் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று கடும் எதிர்ப்புகள் நிலவியது. முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தமிழ்நாடு ஆளுநர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஆ. என் ரவி ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக மூத்த எம்எல்ஏக்கள் சிலர், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
சிபிஐ
தமிழ்நாடு ஆளுநராக ஆர். என் ரவி நியமனம் செய்யப்பட்டு இருப்பது மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. காஷ்மீர், நாகலாந்து போன்ற பிரச்சனை நிறைய பகுதிகளில் முக்கிய பொறுப்புகளை கவனித்தவருக்கு தமிழ்நாடு ஆளுநராக பதவி வழங்கி இருப்பது பல கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. ஆர்என் ரவி கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். பீகாரை சேர்ந்த இவர் கேரளாவில் பணியாற்றிவிட்டு அதன்பின் சிபிஐ மூலமாக மத்திய பணிகளுக்கு சென்றவர்.
நாகலாந்து
மத்திய அரசால் கவனிக்கப்பட்ட ஆர்என் ரவி புலனாய்வு பிரிவுக்கு மாற்றல் ஆனார். வடமாநிலங்களில் பல இடங்களில் சுரங்க கும்பல்கள் அத்துமீறலை அடக்கியதில் இவர் பங்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அதோடு காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் இவரின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் இவருக்கும் அஜித் தோவலுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இதன் பின்பே தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் சேர்ந்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஓய்வு
2014ல் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஓய்வில் இருந்த ஆர். என் ரவி மீண்டும் கவனத்திற்கு உள்ளானார். பிரதமர் அலுவலகத்தின் புலனாய்வு கூட்டுக் கமிட்டியின் தலைவராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டார். பின்னர் நாகாலாந்தில் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சி குழுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுடன் தொடக்கத்தில் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார்.
அங்கு ஆளுநராக இருந்த போதும் கூட இவர் கிளர்ச்சி குழுக்களுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தார்.
ஏன்
இப்படி தீவிரவாத இயக்கங்களுக்கும், கிளர்ச்சி இயக்கங்களுக்கும் எதிராக செயல்பட்டவர் ஏன் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சமூக பிரச்சனைகள் நிலவவில்லை. இங்கு தீவிரவாத இயக்கங்களோ, நக்சலைட் அமைப்புகளோ பெரிதாக இல்லை. அதேபோல் பெரிதாக போராட்டங்கள், பிரச்சனைகள் ஏற்படாத அமைதி பூங்காவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரிய அளவில் கிளர்ச்சி போராட்டங்கள் எதுவும் இல்லை.
பாதுகாப்பு
ஏன் விவசாய போராட்டம் கூட வடஇந்தியா போல இங்கு வலுவாக இல்லை. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டிற்கு என்று ஆர்என் ரவியை கொண்டு வந்தது ஏன் என்று கேள்வி எழுந்து உள்ளது.மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக அரசு குரல் கொடுத்து வரும் நிலையில் இவரின் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், இவருக்கு என்று மத்திய அரசு டாஸ்க் ஏதாவது கொடுத்து இருக்கிறதா என்பது வரும்நாட்களில்தான் தெரியும்.