அடேங்கப்பா..கொரோனா விதிமுறைகள் பின்பற்றாதவர்களிடம் இருந்து.. 4 நாட்களில் ரூ. 2.78 கோடி அபராதம் வசூல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கொரோனா விதிமுறைகளை மீறியதால் பொதுமக்களிடம் இருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் 2.78 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மீண்டும் உச்சமடைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 6,618 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 9,33,434 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று கொரோனா காரணமாக 22 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பும் 12,908ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மேலும், கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத நபர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலத்தில் மாஸ்க் அணியாத நபர்களிடம் இருந்து 200 ரூபாயும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்களிடம் இருந்து 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கொரோனா விதிகளை மீறியதாகக் கடந்த 4 நாட்களில் சென்னை தவிரப் பிற இடங்களில் இருந்து மட்டும் 2.78 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாஸ்க்குகளை அணியாதவர்களிடம் இருந்து 2,52,34,900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு காவல்துறை மண்டலத்தில் இருந்து மட்டும் சுமார் 85 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றாத நபர்களிடம் இருந்து சுமார் 25.90 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6,465 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாகக் கடந்த 8ஆம் முதல் நான்கு நாட்களில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக மாநிலம் முழுவதும் 1,30,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக பேருந்து பயணங்களில் கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கு இபாஸ் கட்டாயம், வழிபாட்டுத் தலங்களுக்கு நேரக் கட்டுப்பாடு எனப் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தன. இந்த கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.