இது பாசிச சர்வாதிகாரமாம்..ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு..காயத்ரி ரகுராமுக்கு வந்ததே கோபம்!
சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத நிலையில் இது பாசிச சர்வாதிகாரம் என திமுகவை நடிகையும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் ஆக்ரோஷமாக விமர்சனம் செய்துள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22ம் தேதி கட்டுப்பாடுகளுடன் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் இந்த சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையே தான் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்றைய தினம் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் நாடியது. தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தால், அந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தரப்பில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு தடையை எதிர்த்து தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காயத்ரி ரகுராம் விமர்சனம்
இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பாஜகவினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதுதொடர்பாக பாஜக தலைவர்கள் திமுகவினரை கடுமையாக சாடி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது நடிகையும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

பாசிச சர்வாதிகாரம்
இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛திமுக அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தமிழகத்தில் ஆர்எஸ்எஸஅ பரணிக்கு அனுமதி அளிக்ாமல் உள்ளது. திமுக சட்டம் ஒருங்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. இது மிகவும் பாசிச சர்வாதிகாரத்தை காட்டுகிறது'' என கோபமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications