ஆர்எஸ்எஸ் பேரணி..காந்தியை கொன்றவர்களே பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்கலாமா? போலீஸ் வாதம்
சென்னை: நாதுராம் கோட்சேவை ஒரு கையில் ஏந்துபவர்களாக உள்ள ஆர்.எஸ்.எஸ். அவரால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும், நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் வாதிட்டார்.

ஆர்எஸ்எஸ் அனுமதி மறுப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, நீதிமன்றம் அனுமதி வழங்கிய தங்களது ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்க முடியாது என குற்றம்சாட்டினார்.
கடந்த 2013ல் அம்பேத்கர் பிறந்த நாளன்று பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தற்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

உத்தரவாதம்
யாருக்கும் எதிராகவும் கோசங்கள் எழுப்ப மாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதன் அர்த்தம் புரியவில்லை என்றும், மனவலியை ஏற்படுத்துவதாகவும் பிரபாகரன் தெரிவித்தார். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம்
மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது என்றும், பொது மக்களின் நலன் தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றும் அதை கருத்தில் கொண்டு காவல்துறை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். காந்தி ஜெயந்தி கொண்டாடக்கூடாது என காவல்துறை கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். தவறாக உருவகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். நாதுராம் கோட்சேவை ஒரு கையில் ஏந்துபவர்களாக உள்ள ஆர்.எஸ்.எஸ். அவரால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்க முடியாது என்றும், அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்தே அமைச்சர் கலந்து கொள்ளக் கூடிய உள்ளரங்கு கூட்டத்திற்கே அனுமதி மறுக்கப்பட்டு நிலையில் ஊர்வலத்தை எப்படி அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.

காவல்துறை விளக்கம்
அப்போது நீதிபதி குறுக்கிட்டு காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பிய போது, அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பில் தற்போதைய சூழலில் அன்றைய தினத்திற்கு பதிலாக மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பாஜகவினருக்கு பாதுகாப்பு
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா தடைக்கு பிறகு சென்னை வடக்கு மண்டலத்தில் மட்டும் பா.ஜ.கவினற்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன எனவும், என்.ஐ.ஏ. சோதனை, பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவற்றிற்கு பிறகு 52,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நவம்பர் 6 பேரணி நடத்த அனுமதி
அப்போது நீதிபதி தற்போதைய செய்திகள், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அறிவுறுத்தினார். அதன்பின்னர் நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்தும் படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்..












Click it and Unblock the Notifications