உக்ரைன் நாட்டை தாக்கும் ரஷ்யா... சென்னையில் ரஷ்ய தூதரகத்திற்கு பாதுகாப்பு
ரஷ்யாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைன் நாடு நிலைகுலைந்து போனது. போர் பதற்றம் நீடிப்பதால் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகளிலேயே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் நான்கு மிகப்பெரிய வங்கிகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்தின் 30 போர் டாங்குகள் அழிக்கப்பட்டதாகவும் , ரஷ்ய விமானப்படையின் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை மிக தீவிரமாக தொடர்ந்து இருக்கக்கூடிய நிலையில் பல்வேறு நிலைகளை கைப்பற்றி இருக்கின்றது. உக்ரைனுடைய ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான நிலையங்கள் அழிக்கப்பட்டது என ரஷ்ய தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது. ரஷ்யா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வான்வெளியை உக்ரைன் மூடிய நிலையில், அங்குள்ள இந்தியர்களை நிலப்பகுதி வழியாக மீட்பதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதற்காக வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனின் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு, ரொமேனியா ஆகிய நாடுகள் உக்ரைன் எல்லையில் அமைந்துள்ளன. மீட்பு பணி தொடர்பாக இந்த நாட்டில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேற விருப்பம் உடையவர்கள் வெளியுறவுத்துறை மற்றும் உக்ரைனில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சாந்தோம் சாலையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்பாக யாரும் ஆர்பாட்டம் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கருதி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications