அனிதாவை விழுங்கிய "நீட்".. இன்னும் நீங்காமல் தொடர்கிறதே கதறல்.. எப்போதுதான் புரியும் எங்களின் வலி?
அரியலூர் அனிதாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது
சென்னை: "எனக்காக இல்லை.. என்னை போன்ற ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்காக நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்.. என்னை போன்ற பல ஏழை மாணவர்களின் கனவை அது கலைக்கும்" என்று ஊடகங்கள் முன்பு கதறிய அனிதாவின் நினைவு நாள் இன்று!
அரியலூரில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் அனிதா.. தாயை பறி கொடுத்தவர்.. உடம்பு சரியில்லாமல் போகவும், சரியான ட்ரீட்மென்ட் அவருக்கு கிடைக்கவில்லை.
அம்மா இல்லாத குழந்தையாக அனிதா வளரும்போதே, இனி தன்னை போல யாரும் கஷ்டப்பட கூடாது, போதிய மருத்துவம் இல்லாமல் அநியாயமாக ஒரு உயிர் போகக்கூடாது என்று முடிவெடுத்தார்.. டாக்டராக வேண்டும் என்ற கனவு துளிர்த்தது.
Fake News Buster: CLAT தேர்வு எப்போது நடக்கும்? பொய்யாக பரவும் செய்தி.. தேசிய சட்ட பல்கலை விளக்கம்!
கொள்கை
பிளஸ் 2வில் நல்ல மார்க் கிடைத்தது.. அப்போதுதான், நீட் என்ற அரக்கன் வந்தான்.. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே டாக்டருக்கு படிக்க முடியும் என்ற நிலை உருவானதால், கிராமப்புற மாணவர்கள் திண்டாடிவிட்டனர்.. எதற்காக அந்த கொள்கை என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தனர்..
ஏழை மாணவி
தமிழகமே பொங்கியது.. சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லிக்கு சென்று பேசினார்.. நிர்மலா சீதாராமனும் நம்பிக்கை வார்த்தை தந்து அனுப்பி வைத்தார்.. ஆனால் எதுவுமே நடக்கவில்லை.. கடைசியில் ஏழை மாணவி அனிதாவே கோர்ட் வாசலை மிதித்து நீதி கேட்டார்.. அங்கும் தோல்வியே கிடைத்தது.. வேறு வழியின்றி குழப்பமும், துக்கமும் நிறைந்த மனதுடன் நீட் தேர்வு எழுத ஆரம்பித்தார்.
அதிர்ச்சி
ஆனால் படித்தது ஒன்று, அந்த கேள்விதாளில் இருந்தது வேறு.. எதுவுமே புரியவில்லை.. கேள்வி தாளை பார்த்து ஷாக் ஆன அனிதா, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தார்.. ஒருகட்டத்தில் தற்கொலையும் செய்து கொண்டார். நீட் தேர்வு அறிவிப்பு எந்த அளவுக்கு தமிழகத்தை உலுக்கியதோ, அதே அளவுக்கு அனிதாவின் மரணம், மொத்த மாநிலத்தையும் புரட்டி போட்டது.. மத்திய அரசு மீது கண்டனங்கள் வலுவானது.. மாநில அரசு போதிய அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.. அனிதாவின் மரணத்தை யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை.
அனிதாக்கள்
"நீட் தேர்வு என்னை போன்ற பல ஏழை மாணவர்களின் கனவை கலைக்கும்" என்று ஊடகங்கள் முன்பு அனிதா கதறியதை நாடே மறந்திருக்க முடியாது.. ஆனால் ஒரு உயிரை காவு வாங்கியும், நீட்தேர்வு விரட்டி கொண்டே வருகிறது.. நிறைய அனிதாக்கள் நம்மை விட்டு சென்று கொண்டே இருக்கிறார்கள். எத்தனை அனிதாக்கள் இறந்தாலும் அது தற்கொலைகள் அல்ல.. கொலைதான்!
தற்கொலைகள்
இன்னும்ஆயிரக்கணக்கானவர்களின் கனவுகள் கொல்லப்பட்டு வருகின்றன.. தற்கொலை செய்வதற்கு முன்பு இந்த பிள்ளைகள் நீட் தேர்வு காரணத்தைதான் எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.. அனிதாக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கையை இன்னும் யாரும் எடுக்கவில்லை.. அழுத்தங்கள் மட்டுமே தரப்பட்டு வருகின்றன..
ஒப்புதல்
இந்த தேர்வை எழுதும் அளவுக்கு சில கிராமப்புற மாணவர்கள் இன்னும் உயரவில்லை.. அவர்களை அதற்கு தகுதிப்படுத்தும் அளவுக்கு நம் மாநில கல்வி முறையின் தரம் இன்னும் உயர்த்தப்பட வேண்டியது இருக்கிறது.. விலக்கு கேட்கப்படுவதன் ஆழமான காரணத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.. இது சம்பந்தமாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கிடப்பிலேயே உள்ளது.. அவைகளை திருப்பியும் அனுப்பவில்லை.
மத்திய அரசு
ஒருவேளை, திருப்பி அனுப்பிவிட்டால், மத்திய அரசு அதற்கு வலுவான ஒரு காரணத்தை சொல்ல வேண்டும்.. அந்த காரணத்தை இங்கு நாம் சரி செய்துவிட்டோமேயானால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும்.. இதற்காகவே நீட் தேர்வு சம்பந்தப்பட்ட நம் மசோதாக்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பெரும்பாலானோர்!
தீர்வு எப்போது?
இதற்கெல்லாம் எப்போதுதான் தீர்வு... அச்சத்திலும், குழப்பத்திலும், கலக்கத்திலும், பீதியிலும் உள்ள கலந்த மாணவர்களை தெளிவுபடுத்துவது யார்? இந்த மனநிலையில் இவர்கள் நீட் தேர்வு எழுதினால், அது சரி வருமா? நாளைக்கு மார்க் போதுமானதாக இல்லை என்று சொல்லி நிராகரித்தால், இன்னும் எத்தனை அனிதாக்கள் உருவாவார்களோ என்ற கவலை பீடித்து வருகிறது.. எப்போதுதான் புரியும் அனிதாக்களின் வலியும், நிலையும்!?