‛‛பனிக்கட்டி வடிவம்’’.. நிலவின் மேற்பரப்பில் நீர் இருக்கு.. மீண்டும் சாதித்த இஸ்ரோ ஆய்வு
சென்னை: நிலவில் உள்ள பள்ளங்களில் தண்ணீருக்கான ஆதாரம் இருப்பதையும், நிலவின் நிலப்பரப்பில் உள்ள பள்ளத்தில் பனிக்கட்டிகளாக இருப்பதை ஆய்வின் மூலம் இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்ய நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் விண்வெளி திட்டத்தை உருவாக்கியது. சந்திரயான் 1 திட்டம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது. அதன்பிறகு சந்திரயான் -2 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது விழுந்து நொறுங்கியது.

அதன்பிறகு சந்திரயான் - 3 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் முதல் நாடாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் கருவிகள் தென்துருவத்தில் ஆய்வை வெற்றிகரமாக முடித்தன. இந்த ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட டேட்டாக்களை கொண்டு இஸ்ரோ ஆராய்ச்சியை தொடங்கியது.
ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் போன்றவற்றுடன் இணைந்து இஸ்ரோ விண்வெளி பயன்பாட்டு மைய விஞ்ஞானிகள் ஆய்வை நடத்தினர். அப்போது நிலவில் உள்ள பள்ளங்களின் மேற்பரப்பில் நீர் ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி நிலவின் பள்ளத்தின் மேற்பரப்பை விட அதற்கு கீழுள்ள சப்-சர்ஃபேஸ் பகுதியின் முதல் இரண்டு மீட்டர்களில் பனியின் அளவு ஐந்து முதல் எட்டு மடங்கு வரை பெரிதாக இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நிலவின் வடக்கு மற்றும் தென்துருவத்தில் காணப்படுகிறது. ஆனாலும் தென்துருவத்தை விட வடதுருவத்தில் பனியின் அளவு 2 மடங்கு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவை பொறுத்தமட்டில் நிலவில் நீர் உள்பட எந்த வகையான வாயுக்கள், கனிமங்கள், தனிமங்கள் உள்ளன. நிலவில் மனிதன் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆராய்வது தான் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் நிலவில் தண்ணீருக்கான சாத்தியக்கூறை மீண்டும் ஒருமுறை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. உண்மையில் இது இஸ்ரோவின் இன்னொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஏற்கனவே சந்திரயான் 1 நீர் மூலக்கூறு இருப்பதையும், அதன்பிறகு சந்திரயான் - 2 திட்டத்தின் ட்யூயல் ஃப்ரீக்வென்ஸி சிந்தட்டிக் அப்பர்ச்சர் ரேடார் கருவியின் போலரிமெட்ரிக் ரேடார் மூலம் சேகரிக்கப்பட்ட தரவின்படி நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதை ஆய்வு முடிவு என்பது அந்த 2 விஷயங்களையும் உறுதி செய்யும் வகையில் உள்ளது.
மேலும் நிலவில் எப்படி பனிக்கட்டி வடிவில் நீர் உருவாகியது என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் இம்ப்ரியன் கால (அதாவது 38 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) எரிமலை அவுட்-கேஸிங் ஏற்பட்ட போது பனிக்கட்டிக்கான ஆதாரம் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications