சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி படிக்க வைப்பதா? மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் தூக்கியடிப்பு!
சென்னை: சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி படிக்க வைத்த சர்ச்சையை தொடர்ந்து மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் அல்லது ரத்தினவேல் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை கோட் வழங்கப்பட்டு அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுவாக மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் உலக அளவில் ஹிப்போகிரேடிக் எனப்படுகிற தொழில் சார் உறுதி மொழியை முதலாமாண்டு ஏற்றுக் கொள்வது வழக்கம்.
சமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்
சமஸ்கிருத உறுதி மொழி
அப்படி உலகளாவிய நடைமுறையை மீறி மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று திடீரென சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கடும் அதிருப்தி அடைந்தனர். சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த மதுரை மருத்துவ கல்லூரியையும் மட்டுமின்றி தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மீது குற்றச்சாட்டு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல், மருத்து கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த உறுதிமொழியைத்தான் மாணவர்கள் வாசித்தனர். இந்த உறுதி மொழியை மாணவர்கள்தான் தயாரித்தனர். எங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றார். தேசிய மருத்துவ கவுன்சில் ஆணைய தரப்போ, இத்தகைய உறுதி மொழியை மாணவர்கள் வாசிக்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என விளக்கம் தந்தது.
சு.வெங்கடேசன் கண்டனம்
இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில்,மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி எடுத்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியை தருகிறது. ஒன்றிய அரசின் சமஸ்கிருத திணிப்பு முயற்சியின் பகுதியாகவே இந்த வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது வன்மையான கண்டனத்திற்கு உரியது என கொந்தளித்திருந்தார்.
முதல்வர் அதிரடி மாற்றம்
இத்தகைய சர்ச்சை வெடித்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் விசாரணைகளை நடத்தியது. இதனையடுத்து முதல் கட்டமாக மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது முதல்வர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டுள்ள ரத்னவேல், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு விளக்கம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவ கல்லி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கும் இப்போகிரேடிக் உறுதி மொழி காலம் காலமாக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்தில் இருந்து பின்பற்ற வரப்படுகிறது. அரசு மதுரை மருத்துவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்க்ளுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகிரிஷி சரக் சப்த் எனும் உறுதி மொழி மேற்கொள்ளப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
நடவடிக்கை ஏன்?
இதன் பொருட்டு மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகிரிஷி சரக் சப்த் உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வைத்தது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைகள் இப்போகிரேடிக் உறுதிமொழியைத்தான் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தி, சமஸ்கிருத சர்ச்சை
அண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, நாட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி மொழிதான் இருக்கும் என்றார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சென்னையில் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நடத்தினார். இதற்கு வைகோ, முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சமஸ்கிருத விவகாரம் தமிழகத்தில் மீண்டும் புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
ஹிப்போகிரேட்டிக் உறுதி மொழி
கிரேக்கத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவரான ஹிப்போகிரேட்டிக் கிமு 460 முதல் கிமு 377 வரை வாழ்ந்தவர். மருத்துவத்தின் தந்தை (Father of Medicine) என்று அழைக்கப்படுபவர். அவர் பெயரால் மருத்துவப் பட்டதாரிகள் தங்களது மருத்துவப் பணி தொடங்குமுன் எடுக்கும் உறுதிமொழிதான் ஹிப்போகிரேடிக் உறுதி மொழி. அதாவது மருத்துவ துறைக்கு என உள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் ஓர் உறுதிமொழிதான் ஹிப்போகிரேடிக் உறுதிமொழி. உலகம் முழுவதுமே மருத்துவ துறை இத்தகைய உறுதி மொழியை பின்பற்றி வருகிறது.
Recommended Video
சராக் ஷாபாத் உறுதிமொழி
ஹிப்போகிரேடிக் உறுதி மொழியை அகற்றிவிட்டு அதன் இடத்தில் உட்கார வைக்கப்படுவதுதான் ஷராக் ஷாபாத் (சராக் ஷாபாத்). ஷராக்கா சமதி என்ற வழக்கில் செத்து ஒழிந்துபோன சமஸ்கிருத மொழி பாட நூலில் இருந்து இந்த ஷராக் ஷாபாத் எனும் உறுதி மொழி எடுக்கப்படுகிறது. இது எத்தனை மூடத்தனமானது எனில் ஒரு பெண்ணுக்கு சிகிச்சை தரும் போது அப்பெண்ணின் கணவர் அல்லது ஒரு ஆண் உடன் இருக்க வேண்டும்; இல்லை எனில் அந்த பெண்ணுக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை தர முடியாது என்பதை வலியுறுத்துகிற பழமையான அம்சங்களைக் கொண்டது. அதாது ஹிப்போகிரேடிக் என்பது அன்னியமாம். ஷராக் முனிவர் எழுதியதாக நம்பப்படும் ஷராக் ஷாபாத் என்பது சுதேசியாம். ஆகையால் இதனை பின்பற்றுகிறார்களாம்.