சசிகலாவின் எதிர்பார்ப்பு வீணாப் போச்சே.. எதுவும் உடையலையே.. எடப்பாடியார் வைத்த செக்!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதுரியத்தால்தான் கட்சி உடையவில்லை. சசிகலாவின் திட்டமும் வீணாகப் போய் விட்டதாக அதிமுகவினர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு சசிகலா மேற்கொள்ளும் நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் மாறும் என பல தரப்பு அரசியல் விமர்சகர்களும், ஏன் பத்திரிகையாளர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சசிகலா வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் ,அவர்கள் திட்டம் போட்டது போல எதுவும் நடக்கவில்லை. சசிகலா மற்றும் தினகரனின் பிளான் flop ஆகிவிட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
யாரும் மாறலையே
சசிகலா வெளியே வந்தவுடன் பல அமைச்சர்களும் நிறம் மாறுவார்கள், பயந்து நடுங்குவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமியின் அணியிலேயே பலமாக நிற்கின்றனர். இதை அனைவருமே கண்கூடாக பார்த்து வருகின்றனர்.
அதிரடி எதிர்ப்பு
அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் தொடர்ந்து சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிரான கருத்தை ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஓ.எஸ் மணியன் போன்று மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
சாதுரியம்
ஆட்சியில் தனது ஆளுமையை காட்டிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியலிலும் தனது சாமர்த்தியத்தை காட்டி அசத்தி வருவதாக பல அரசியல் நோக்கர்களும் தெரிவித்து வருகின்றனர். அவர் சமயோஜிதமாக செயல்பட்ட காரணத்தால்தான் சசிகலாவின் திட்டம் ஏதும் பலிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
வரவேற்பு
சிறையில் இருந்து வந்த முதல் நாள் சசிகலாவிற்கு நல்ல வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு தொண்டர்கள் எங்கள் பக்கம் என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் பிறகு பெரிய அளவில் யாரும் சென்று சசிகலாவின் சந்திக்க வில்லை என்பதே உண்மை. பல அமைச்சர்களும்,எம்.எல்.ஏக்களும் எங்களுடன் ரகசியமாக பேசி வருகின்றனர் என்று எப்போதும் போல தினகரன் சொல்லி வருகிறார்.
தினகரனை நம்பினால்
ஆனால் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை என்று சொல்கிறார்கள். தினகரனை நம்பி போனால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்று பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் ஒரு வலுவான கருத்தை தெரிவித்திருந்தார். அது கிட்டத்தட்ட அனைவரையும் உறைய வைத்துள்ளதாக கருதப்படுகிறது. ஸ்லீப்பர் செல் என்று அவர் அழைத்து வந்த 18 எம்எல்ஏக்கள் தனது பதவிகளை இழந்தனர்.
சமயோஜிதம்
உடன் சுற்றிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ வெற்றிவேல் உடல்நிலை சரியில்லாமல் இறந்தே போய்விட்டார். இதுதான் சசிகலா, தினகரனின் ராசி என்று அதிமுகவினர் சொல்கிறார்கள். ஆட்சியில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனது திறமையை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பது பலரின் கருத்தாக எழுந்துள்ளது.