ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்த அதே நாளில் தமிழகம் திரும்பும் சசிகலா - பரபரப்புக்கு காரணம் அதுதானாம்
சென்னை: மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் முன்பு ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்து தர்மயுத்தம் நடத்திய அதே நாளில் சசிகலா சென்னை திரும்புவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சசிகலா மெரீனாவில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் வரும் 7ஆம் தேதி சென்னை திரும்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017 ஆம் தேதி அதே நாளில்தான் ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார் .
ஜெயலலிதா அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகித்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்வராக நள்ளிரவில் அழுது கொண்டே பதவியேற்றார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது இடைக்கால முதல்வராக காட்டிய பவ்யத்தை அப்போது சசிகலாவிடம் அவர் காட்டவில்லை.வர்தா புயல் சென்னையை உலுக்கியபோது, மக்கள் மத்தியில் தனது இமேஜை உயர்த்தும் வகையில் பம்பரமாக சுழன்றார். இது சசிகலாவுக்கு சந்தேகத்தை உருவாக்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும் கைக்குள் கொண்டு வர திட்டமிட்டார். ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது.
சசிகலாவை உச்சியில் தூக்கி வைக்கும் பிரேமலதா எல்லாம் காரணமாகத்தானாம்
ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம்
தர்மயுத்தம், திமுக.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டபோது பயன்படுத்திய வார்த்தை! அதே வாசகத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் பிரபலமாக்கினார் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 2 நாட்கள் அமைதியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, யாரிடமும் எதுவும் சொல்லாமல், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்களை மூடி தியானத்தை தொடங்கினார். முகத்தை படு சோகமாக வைத்துக்கொண்டு ஓபிஎஸ் கண்களை மூடி தியானமிருந்தபோது, மொத்த தமிழ்நாட்டையும் சில நிமிடங்களில் தன் பக்கம் திருப்பினார்.
சசிகலாவே காரணம்
கண்களை திறந்த ஓபிஎஸ், சசிகலாவின் நிர்ப்பந்தத்தால் ராஜினாமா செய்தேன். சசிகலாவை பற்றி 10 சதவிகிதம் கூறியிருக்கிறேன். தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவிகிதத்தை கூறுவேன் என்று அதிரடி பேட்டி கொடுத்தார். அந்த தியானத்தை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஹீரோவாக உருவெடுத்தார் ஓபிஎஸ்.
ஜெ. மரணத்திற்கு நீதி கேட்ட ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி தமிழ்நாடு முழுவதும் அவரது தரப்பு நடத்திய உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது, ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைப்பது ஆகிய இரண்டும்தான் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தின் கோரிக்கைகள்! இவற்றை இபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொண்டதால், அணி இணைப்புக்கு ஒத்துழைத்தார் ஓபிஎஸ்!
சசிகலா ரிட்டன்ஸ்
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி 4ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. அதே நாளில்தான் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வருகிறார் சசிகலா. தமிழகம் திரும்பும் நாளில் சசிகலாவை அதிமுகவினர் வரவேற்பார்கள் என்று கூறி வருகிறார் டிடிவி தினகரன்.
அவர் வருவாரா?
நீங்க வேணும்னா பாருங்க, பன்னீர்செல்வமே சென்னையின் எல்லையில் நின்று சின்னம்மாவை வரவேற்பார் என்று கூறியதாக ஒரு தகவல் ஒன்றும் உலா வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. சென்னைக்கு வரும் சசிகலா, நேராக நினைவிடத்திற்கு செல்லாத வகையில் தற்போது பார்வையாளர்கள் அனுமதியை ரத்து செய்து விட்டார்கள்.
சசிகலா தர்மயுத்தம்
போயஸ்கார்டன் நினைவில்லமாக அறிவிக்கப்பட்டு அந்த வீட்டின் சாவியும் தற்போது அரசு வசம் உள்ளது. அதிமுக தலைமைச் செயலகத்திற்குள்ளும் சசிகலா செல்ல முடியாத வகையில் எடப்பாடி பழனிச்சாமி செக் வைத்திருக்கிறார். சென்னை திரும்பும் சசிகலா நேராக எங்கு செல்வார்? மெரீனாவில் அமர்ந்து தர்ணா செய்தாலும் தர்மயுத்தம் 2.0 நடத்தினாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.