திடீர் திருப்பம்.. சுதாகரன், இளவரசியை தொடர்ந்து சசிகலாவின் சொத்துக்களும் அரசுடைமை!
சென்னை: சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை அரசுடைமை ஆக்கிய தமிழக அரசு, சசிகலா சொத்துக்களையும் அரசுடைமை ஆக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனைக்குள்ளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து நேற்று சென்னை திரும்பினர்.
இந்நிலையில் இளவரசி மற்றும் சிறையில் உள்ள சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை அரசுடமையாக்கிய தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் ஆயிரம் விளக்கு வாலஸ்கார்டன் பகுதியில் உள்ள கட்டிடங்கள், ஸ்ரீராம் நகரில் உள்ள பல கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் அரசுடைமையாக்கப்பட்டன.
ஊத்துக்காடு
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு பகுதிகளில் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள 141.5 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தை பறிமுதல் செய்து தமிழக அரசுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதன் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூரில் 6 இடங்களில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சிக்னோரோ எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலத்தையும், அதில் வரும் விவசாய வருவாயையும் அரசுடைமை ஆக்கி கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி
இதேபோல தஞ்சை வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள 26 ,540 சதுர அடி காலி மனையை அரசு நேற்று காலை பறிமுதல் செய்துள்ளது. இது அரசுடமையாக்கப்பட்டது. இனி அதிலிருந்து வரக்கூடிய வாடகை வாடகை நிலுவைத் தொகை ஆகியவை அரசுக்கு சொந்தமாகும். இந்த சொத்து கடந்த 1995 ஆம் ஆண்டு 11 லட்சத்திற்கு வாங்கப்பட்டது கடந்த 14 2 2017 அன்று வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடியில் சுதாகரன் இளவரசிக்கு சொந்தமான 1050 ஏக்கர் நிலங்கள் நேற்று அரசுமை ஆக்கப்பட்டது
அரசுடைமையானது
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலாவின் உறவினர்களாக சுதாகரன, இளவரசி சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன இளவரசி உடன் தண்டனைக்குள்ளான சசிகலாவின் சொத்துக்களை இதுவரை அரசுடைமை ஆக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் சசிகலா வசம் உள்ள சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வாய்ப்பு உள்ளதாக ஊடக வட்டார தகவல்கள் நேற்று வெளியாகின. இந்நிலையில் இன்று சசிகலாவின் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை, குடியிருப்புகள் உள்ளிட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துகளை அரசுடமையாக்கி அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமம், கீழக்காவாதுகுடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.