சசிகலாவுக்கு "ஓபிஎஸ்ஸிடம்" இருந்து கிடைத்த கிரீன் சிக்னல்?.. ஆட்டத்தை ஆரம்பிக்க புறப்பட்டார்!
சென்னை: நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை போன்றவர்கள், என் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பார்க்க செல்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறை தண்டனை முடிந்து சென்னை வந்ததும் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. அமமுக, அதிமுக தொண்டர்களிடம் மட்டும் தொலைபேசியில் பேசி வந்தார்.
இது லீக்கானது. இதையடுத்து தொண்டர்களின் பல்ஸை தெரிந்து கொண்ட சசிகலா அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க எந்த கருத்தையும் சொல்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனனின் மறைவிற்கும் ஓபிஎஸ் மனைவியின் மறைவுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்து வந்தார்.

ஜெயலலிதா பிறந்த தினம்
இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த தினத்தில் மெரினாவுக்கு சென்று அங்கு வணங்கிவிட்டு தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. இதையடுத்து அவர் அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டி ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று ஆசி பெற்றார்.

ஜெ.சமாதியில் சசிகலா
அது போல் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கழகத்தை அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன். அம்மா உடன் நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதியாகும். 5 ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என பேசியிருந்தார்.

தொடர் தோல்வி
இதையடுத்து அவர் தொண்டர்களை சந்திக்க செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வி அடைந்துள்ளது. இது தொண்டர்களுக்கு வேதனையை தந்துள்ளது. இதனால் இரட்டை தலைமைக்கு எதிராகவும் ஒற்றை தலைமைக்கு ஆதரவாகவும கருத்துகள் வலுக்கின்றன.

தேனியில் அதிமுக கூட்டம்
நேற்று முன் தினம் இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுகவினர் ஆலோசனை நடத்தி சசிகலாவை அதிமுகவை வழி நடத்த அழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அதே தேனி மாவட்டத்தில் நடந்த இன்னொரு கூட்டத்தில் அதிமுக- அமமுகவை இணைக்க வேண்டும், சசிகலா, தினகரனை எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானங்களை நிறைவேற்றி அதை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்கு ஓபிஎஸ் எந்த பதிலையும் சொல்லாமல் தீர்மானத்தை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது. அதாவது ஓபிஎஸ் முன்னிலையில் ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரில் இருந்து சசிகலாவுக்கான முதல் ஆதரவுக் குரல் வந்துள்ளது.
Recommended Video

தென் மண்டலம் புறப்பட்ட சசிகலா
இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியும் சசிகலா தலைமையேற்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலா தென் மாவட்ட தொண்டர்களை சந்திக்க இன்று சென்னையிலிருந்து செல்கிறார். இதுகுறித்து விமான நிலையத்தில் அவர் பேட்டி அளிக்கையில் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பாரக்க செல்கிறேன். அவர்கள் (தொண்டர்கள்) என்னை நிச்சயம் ஏற்பார்கள் என்றார். ஓபிஎஸ் ஊரிலிருந்து ஆதரவு குரல் வந்ததும் அங்கிருந்தே (தென் மாவட்டம்) தனது சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications