புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்த அடுத்த நொடி.. கார்களில் கொடியை மாற்றிய சசிகலா ஆதரவாளர்கள்!
ராமநாதபுரம்: சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு புதியக் கட்சியை தொடங்கி சசிகலா கொடியை அறிமுகம் செய்த அடுத்த நொடியே, அவரின் ஆதரவாளர்கள் தங்களின் கார்களில் அந்த கொடியை மாற்றியுள்ளனர். சசிகலா அறிமுகம் செய்துள்ள கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும், கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் இடம்பெற்றுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு சென்னை திரும்பிய சசிகலாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு சசிகலா அரசியலில் தீவிரம் காட்டவில்லை. அவ்வப்போது அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தி வந்தார். இப்படியான 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துவிட்டன. இதையடுத்து ஓபிஎஸ் தங்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சசிகலா புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். இதுதொடர்பாக சசிகால் பேசுகையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன். 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போல் இனி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதன்பின் புதியக் கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடி கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடிக்கு நடுவே அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சசிகலா கொடியை அறிமுகம் செய்த அடுத்த நொடியிலேயே தங்களது கார்களில் இருந்த அதிமுக கொடியை நீக்கிவிட்டு, சசிகலா அறிமுகம் செய்த கொடியை பொருத்தினர். இதனால் சசிகலா புதிய சிக்கலாக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு அதிகளவில் கிடைக்கவில்லை.
இம்முறை முக்கலத்தோர் சமூக வாக்குகளை குறி வைத்தே டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ள சசிகலா, புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அதுமட்டுமல்லாமல் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகம் இருக்கும் ராமநாதபுரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications