சசிகலா வரும் தேதியில் திடீர் மாற்றம் - பிப் 8ல் வரவேற்க ஒன்று கூடுங்கள் என டிடிவி தினகரன் அழைப்பு
பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் 8ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகம் வருவார் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம். ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் டிடிவி தினகரன். சசிகலா பிப்ரவரி 7ஆம் தேதி தமிழகம் வரப்போவதாக நேற்று டிடிவி தினகரன் கூறிய நிலையில் அவர் 8ஆம் தேதி வரப்போவதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலைக்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்படவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல் நலம் குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா பெங்களூருவில் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

பிப்ரவரி 8ல் வருகை
பெங்களூருவில் இருந்து வரும் 7ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக நேற்று மதுரையில் பேசிய டிடிவி தினகரன் கூறிய நிலையில் சசிகலா வரும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
|
திங்கட்கிழமை பயணம்
தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் வருகிற 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்கள் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
ஒரு தாய் பிள்ளைகள்
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம்! என்று கூறியுள்ள டிடிவி தினகரன், ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

முழு ஒத்துழைப்பு
நம்முடைய வரவேற்பு, கொண்டாட்டம், மகிழ்ச்சி யாருக்கும் எந்த இடைஞ்சலையும் தரக்கூடாது. கர்நாடக மாநில காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ள டிடிவி தினகரன், தமிழக எல்லை தொடங்கி சென்னை வரை திரண்டு வந்து வரவேற்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிக்னல் காட்டிய டிடிவி தினகரன்
தீய சக்தி என்று திமுகவை சொல்லும் தினகரன், திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதே நமது நோக்கம் என்று பேட்டி அளித்துள்ளார். இன்றைக்கும் ஒரு தாய் பிள்ளைகளாக வரவேற்க வாருங்கள் என்று அதிமுகவினருக்கு சிக்னல் கொடுத்துள்ளார். அதிமுகவினர் கட்சி கட்டளைகளை மீறி இப்போது போஸ்டர் ஒட்டி வருகின்றனர். பிப்ரவரி 8ஆம் தேதி எத்தனை பேர் செல்வார்களோ பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications