பொறுத்தது போதும்.. மர்மத்தை போட்டு உடைக்கும் வீடியோவை வெளியிடப் போகிறாரா சசிகலா? பரபர பேச்சுக்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒரு புது ஆயுதத்தை சசிகலா கையில் எடுக்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் சிலரோடு பேசி ஆடியோக்கள் வெளியிட்ட நிலையிலும், அதிமுக கட்சியில் பெரிய அதிர்வு ஏற்படாத நிலையில், இப்போது ஒரு வீடியோ விஷயத்தை வெளியே எடுக்கப் போகிறாராம் சசிகலா என்கிறார்கள்.
இதுபற்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் தகவல் இதுதான்:

பிரமாண்ட வரவேற்பு
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்தபோது சசிகலாவுக்கு வழிநெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெங்களூரில் இருந்து சென்னை வருவதற்கு வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக நேரம் பிடித்தது சசிகலா வாகனத்திற்கு. அந்த அளவுக்கு சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பளித்தனர். இந்த சம்பவம் நடைபெற்றது சட்டசபை தேர்தலுக்கு முன்பாக. எனவே சட்டசபை தேர்தலின்போது அதிமுகவில் பெரும் பிரளயத்தை சசிகலா ஏற்படுத்துவார் என்று அப்போது பலரும் ஆரூடம் சொன்னார்கள்.

பரபரப்பு ஆடியோக்கள்
அந்த நிலையில்தான் திடீரென அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கப்போவதாக சசிகலா திடீர் அறிவிப்பு வெளியிட்டார். இது அதிமுக தலைவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இனி சசிகலாவால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்கள் நினைத்தனர். இருப்பினும் சட்டசபைத் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு மறுபடியும் சசிகலா அரசியலுக்கு வரப்போவதை உணர்த்திக் கொண்டே இருந்தார். அதிமுக நிர்வாகிகள் சிலருடன் அவர் தொலைபேசியில் பேசினார். நான்தான் அதிமுகவை வழி நடத்த போகிறேன் அவர் பேசி, வெளியான ஆடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அது தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் உடனடியாக சசிகலாவுடன், தொலைபேசியில் பேசிய நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் அதிரடி பேச்சு
இப்படியே நிலைமை போய்க் கொண்டிருந்த சூழ்நிலையில், சசிகலா அதிமுகவுக்கு வருவதற்கு பன்னீர்செல்வம் ஆதரவாக இருக்கிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இது அத்தனையும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் டெல்லி சென்று திரும்பிய பிறகு முற்றிலுமாக மாறி போய்விட்டது. அதுவரை சசிகலாவுக்கு எதிராக வலுவான கருத்துகளைக் கூறாமல் இருந்த பன்னீர்செல்வம் கூட சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் கிடையாது என்றும், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி செல்ல இடம் தரமாட்டோம் என்றும் அறிவித்தார்.

சசிகலா திட்டம்?
அதிமுகவுக்கு செல்வதற்கு இருந்த ஒரு சில வழிகளும் தடைபட்டதை சசிகலா கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே இதற்கு மேலும் பொறுமையாக இருக்க கூடாது இது வேறுமாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது என்ன நடந்தது என்பது பற்றிய வீடியோவை சசிகலா வெளியிடக் கூடும் என்று சில பேச்சு அடிபடுகிறது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்
ஜெயலலிதாவின் இறுதி நாட்களில் வேறு யாரையும் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மட்டும்தான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாகத்தான் ஜெயலலிதா மரணத்தில், மர்மம் நிலவுவதாக கூறி பன்னீர்செல்வம் திடீரென்று தர்மயுத்தம் கூட நடத்தியிருந்தார். அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு எதிரான அதிருப்தி கருத்துக்கள் பரவுவதற்கு அப்பல்லோ நாட்கள் ஒரு காரணமாக மாறின. இந்த நிலையில்தான் ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் தரப்பு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு வீடியோ காட்சியை திடீரென வெளியிட்டது. அதில் ஜெயலலிதா சூப் குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. எனவே மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது உண்மைதான் அதில் எந்த மர்மமும் கிடையாது என்ற கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது.

தினகரன் தரப்பு வெளியிட்ட வீடியோ
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி தினகரன் வெற்றி பெற்றார். இதற்கு அந்த வீடியோ முக்கியமான ஒரு காரணமாக இருந்ததாக அப்போது பேசப்பட்டது. எனவே, இப்போது சசிகலா மீது உள்ள குற்றச்சாட்டை துடைப்பதற்காக ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை.. அதிலும் குறிப்பாக.. ஜெயலலிதா மற்றும் சசிகலா நெருக்கமாக பேசிக் கொண்டு இருந்த வீடியோவை வெளியிட சசிகலா தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சசிகலா தரப்பு இதுவரை அதிகாரபூர்வமாக இதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் இப்படி ஒரு வீடியோ வெளியிடுவது சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத் தரும்.. குறிப்பாக அதிமுக தொண்டர்கள்.. அதிலும் பெண் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரை ஈட்டித் தரும் என்பதால் கடைசி ஆயுதமாக இந்த வீடியோவை வெளியிடக் கூடும் என்பதுதான் அரசியல் களத்தில் பேச்சாக இருக்கிறது.

சசிகலா தரப்பு திட்டம் பலனளிக்குமா?
சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிழல் போல இருந்து சேவை செய்தார், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் கிடையாது என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை உருவாக்குவதற்கு இந்த வீடியோ பயன்படும் என்கிறார்கள். இது தொடர்பாக சசிகள தரப்படும் கருத்து கேட்கமுயன்றபோது யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்களாகவே இதுபோன்ற பேச்சுக்கள்தான், தமிழக அரசியல் வட்டாரத்தில் சுற்றி சுற்றி வருகின்றன. இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் அது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் நடைமுறையில் வருமா அல்லது பேச்சுக்களாக கரைந்துபோகுமா என்பதுதான் தெரியவில்லை. மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு தளர்வான நிலையில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை அல்லது வீடியோவை வெளியே காட்டுவது அவர் கட்டிக்காத்து வந்த இமேஜுக்கு பின்னடைவு, எனவே அதை சசிகலா செய்யமாட்டார், அவ்வாறு செய்தாலும் அது சசிகலாவுக்கு ஆதரவாக போகாமல் நெகட்டிவாக போகவும் வாய்ப்பும் இருக்கிறது என்று சிலர் சொல்வதையும் பார்க்கமுடிகிறது. எது எப்படி இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications