சென்னை சத்யபாமா பல்கலை.யில் வெள்ளம்.. சிக்கினார்களா மாணவர்கள்? பரவுவது பழைய வீடியோ!
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், சதியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் படகில் உடைமைகளுடன் செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் இடுப்பளவு தண்ணீரில் உடைமைகளை எடுத்துச் செல்லும் மாணவர்கள், இந்த பல்கலைக்கழகத்தில் சேராதீர்கள் என பேசுவது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை மட்டுமல்லாது, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

மேலும், வரும் 17ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேடிசிசி எனப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்த போதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மாநகர் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
நேற்று சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ஓஎம்ஆர், கந்தன் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது .மேலும் பல்லாவரம், புளியந்தோப்பு, பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்தது. அதிலும் வேளச்சேரியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பல இடங்களில் தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. சென்னை மாநகராட்சியும் முடிந்த அளவு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் வெள்ளம் புகுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் இடுப்பளவு தண்ணீரில் படகில் தங்கள் உடமைகளை மாணவர்கள் எடுத்துச் செல்வது போலவும், இந்த பல்கலைக்கழகத்தில் யாரும் சேர வேண்டாம் என அவர்கள் பேசுகின்றனர்.
மேலும் பின்னணியில் பல்கலைக்கழகத்தின் வளைவு தெளிவாக தெரியும் நிலையில் பல்கலைக்கழக பேருந்து ஒன்றும் அங்கே நிற்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக பிரபல செய்தி சேனல் ஒன்றில் செய்தியும் வெளியிடப்பட்டது.
அதே நேரத்தில் இது தற்போது எடுக்கப்பட்டது அல்ல.. கடந்த ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ எனவும், தற்போது அதனை அதிமுகவினரும் பாஜகவினரும் பரப்பி வருவதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் தற்போது சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் வெள்ளம் இல்லை எனவும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications