திராவிட மாடல் பாசறை கூட்டங்கள்.. மனநிறைவாக இருக்கிறது.. உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் உதயநிதியின் தலைமையில் இளைஞரணியின் செயல்பாடுகள் மனநிறைவு அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து பேசினர். பின்னர் இறுதியாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதில், போட்டி நடப்பது மட்டுமல்ல, விட்டுக்கொடுப்பதும் ஜனநாயக நடைமுறையில் உள்ள இன்று என்று அண்ணா கூறினார். அந்த வகையில் மாவட்ட கழக செயலாளர்கள் தேர்தலில், திமுக நிர்வாகிகள் நடந்துகொண்டனர். விட்டுக் கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் திமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. சிலருக்கு இறக்கம் காரணமாக கூட பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். அதன் காரணமாக புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்க முடியவில்லை. இதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படவும் இல்லை, மறக்கப்படவும் இல்லை என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் செயல்பாடுகள்
தொடர்ந்து, இனி திமுக தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறது. அதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. திமுகவின் செல்வாக்கும், என் மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உயர உயர பயம் அதிகரிக்கிறது. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்லுவார்கள்,மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்லுவார்கள். இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது.

எச்சரிக்கை தேவை
உங்களின் செயல்பாடுகள் திமுகவுக்கு பெருமைப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறைகளின் காரணமாக, திமுக பழிகளுக்கும், ஏளனத்திற்கும் ஆளானது. இன்றைய சூழலில், கழிவறை, உறங்கும் அறை தவிர்த்து அனைத்தும் பொது இடம். ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறீர்கள். நாம் பயன்படுத்தக் கூடிய சொற்கள் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் நீங்கள் சொல்வதை வெட்டியும், ஒட்டியும் திரித்து வெளியிடுவார்கள் என்று எச்சரித்தார்.

உதயநிதிக்கு பாராட்டு
தொடர்ந்து திமுகவின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இளைஞரணியின் செயலாளர் உதயநிதியின் முன்னெடுப்பு காரணமாக, மாநிலம் முழுவதும் திராவிட மாடல் பாசறை கூட்டங்கள் நடைபெறுவதை பெருமையுடன் சொன்னார்கள். ஒவ்வொரு ஊரிலும் பாசறை கூட்டங்களை முரசொலியில் பார்க்கும் போது மனநிறைவாக இருக்கிறது.

பாசறை கூட்டங்கள்
இதுபோன்ற பாசறை கூட்டங்களின் மூலம் கொள்கை வீரர்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். கட்சிக்கு கூட்டம் சேர்ப்பது முக்கியமல்ல. அது கொள்கைக் கூட்டமாக இருக்க வேண்டும். இதனால் திமுக பயன்பெறும். பாசறை கூட்டங்கள் மூலம் இளைஞர்களுடனும், மாணவர்களுடனும் தனித்தனியாக உரையாடுங்கள். பாசறை கூட்டங்களை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று இல்லை, தெருமுனை கூட்டமாக கூட நடத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications