"கைதிகளை துன்புறுத்துகிறார்".. சிறை கண்காணிப்பாளர் மீது சவுக்கு சங்கர் புகார்.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி, கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியலில் ’சவுக்கு’ சங்கர்! 'அந்த’ கட்சியில் சேரப் போறாரா? கிளம்பிய யூகங்கள்.. அவரே சொல்லிட்டாரே!
இதுகுறித்து சவுக்கு சங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடலூர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த போது, அதே சிறையில் 9 கைதிகள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் இணைந்து அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர். அந்த 9 கைதிகளையும் பொது சிறைக்கு மாற்றக் கோரியும், கைதிகளை துன்புறுத்தும் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக உள்துறைச் செயலாளருக்கு நான் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தனது மனுவில் சவுக்கு சங்கர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, பாதிக்கப்பட்ட நபர்களால் அல்லாமல் மூன்றாம் நபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாலும், இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளும் அவ்வப்போது சிறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என நீதிபதி கேள்வியெழுப்பினார். பின்னர், இந்த மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.