டிசி இல்லைன்னாலும் சேர்த்துக்கணும்.. பெற்றோர் கேட்டா கொடுக்கணும்- பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
சென்னை : பள்ளிகள் நாளை திறக்கப்பட இருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து டி.சி கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ள நிலையில், பள்ளிகள் திறந்த உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிகள் நாளை திறப்பு..ஒரு வாரத்திற்கு புத்துணர்வு பயிற்சி, உளவியல் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்
பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மே 13 முதல் விடப்பட்ட கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ள நிலையில், பள்ளிகள் திறந்த உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உடனே மாற்றுச் சான்றிதழ்
பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில், நாளை பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்குத் தாமதமின்றி டிசி வழங்கிட வேண்டும்.
டிசி வழங்கும் பணிகள்
இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து டி.சி கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசி வழங்கும் பணிகளை நாளையும், நாளை மறுநாளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
டிசி இல்லாவிட்டாலும்
அரசுப்பள்ளிகளில் நாளைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் டிசி பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆர்.டி.இ சட்டம்
மேலும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
வழிகாட்டு நெறிமுறைகள்
முன்னதாக, பள்ளிகள் திறப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. பள்ளியில் மின் இணைப்புகளில் மின்கசிவு கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும், பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே மாணவர்களை அழைத்து வரப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.