புயல்ங்க.. இன்றும் நாளையும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அறிவித்தார் வேலூர் கலெக்டர்
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை நோக்கி நகர நகர, காற்றின் வேகமும் கனமழையும் அதிகரித்திருப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மழையின் தாக்கத்தை பொறுத்து, சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படுமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
‛மாண்டஸ்’ புயல்.. புதுச்சேரி, தமிழகத்தின் 3 மாவட்டத்துக்கு ரெட்அலர்ட்.. 17 இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
மிரட்டும் மாண்டஸ் புயல்
வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், நாளை இது புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவிலேயே இது புயலாக வலுப்பெற்றுவிட்டது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் புயல் நிலைக்கொண்டு இருக்கிறது. 'மாண்டஸ்' என பெயரிடப்பட்ட இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தொடங்கியது கனமழை
தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு மேற்கு - வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இது புதுச்சேரி - ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நோக்கி நகர நகர, வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவின் அளவு அடுத்த 2 மணிநேரத்தில் இருந்து மெல்ல மெல்ல அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூரில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
இதனிடையே, வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. நேரம் செல்ல செல்ல, மழைப்பொழிவின் அளவும் அதிகரித்துள்ளது. மேலும், காற்றின் வேகமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று மதியமும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ராட்சத அலைகளால் கடல் கொந்தளிப்பு
இது ஒருபுறம் இருக்க, மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கடல்களில் அதிக சீற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை எண்ணூர், வியாசர்பாடி, காட்டுப்பள்ளி, புதுச்சேரியின் தேங்காய்திட்டு துறைமுகம் ஆகிய இடங்களில் 4 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்புகிறது. இந்த கடல் கொந்தளிப்பின் காரணமாக மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் கூட கடலுக்கு பக்கத்தில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.