நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் திட்டவட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் ஆதிக்கம் இருந்ததால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் கணக்கீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
பொய் வழக்குப்பதிவு செய்து தம்பதியை மிரட்டிய போலீஸ்.. ரூ.3 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதன்பின்பு பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய தமிழக அரசு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதனால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் 1-ந்தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமுமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
பாதுகாப்பான சூழ்நிலை
தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு ஒழுங்குக்கு மாணவர்கள் பழக வேண்டும் என்பதற்காகவே நவ.1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம். அதற்கு முன்னதாக பள்ளிக்கு கட்டாயமாக வர வேண்டும் என்று அரசு கூறவில்லை
உன்னதமான திட்டம்
தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பெற்றோர்கள் அதன்படியே செய்யலாம். மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது மிக உன்னதமான திட்டமாகும்.
முதல்வர் தொடங்கி வைப்பார்
இந்த திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் பிரச்சினையை சரி செய்ய வழி பிறக்கும். மாலை நேர வகுப்பாக இந்த பயிற்சி நடைபெறும். இது குறித்து பயிற்சி கொடுக்க படித்த தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். நேற்று வரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.