மாட்டிறைச்சியால் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி! எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!
சென்னை: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி மூதாட்டி ஒருவர் அரசுப் பேருந்திலிருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட நிகழ்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, அரசுப் பேருந்தில் பயணம் செய்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியை, அப்பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் மாட்டிறைச்சியை எடுத்துச்சென்றதாக கூறி, நடுவழியில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பின்றி இறக்கி விட்டதாகவும், இதனால் அந்த மூதாட்டி அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்தே சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.''
''மாட்டிறைச்சியை பேருந்து பயணத்தின் போது எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றுகூறியே அந்த மூதாட்டியை நடத்துநர் நடு வழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.''
''பாஜக ஆளும் வட மாநிலங்களில் தான் மாட்டிறைச்சியின் பெயரால் அவலங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பகுத்தறிவு நிறைந்த மாநிலமான தமிழகத்தில் மாட்டிறைச்சியை காரணம் காட்டி மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. இதுபோன்றதொரு அவலம் இனி நிகழ்ந்திடாத வகையில், மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ''
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் முஸ்லீம் மாணவி ஒருவரிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதால் உனக்கு திமிர் அதிகமாக இருக்கும் என்று கூறி ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வேலூர் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் இதற்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பொதுவாக வட மாநிலங்களில் தான் மாட்டிறைச்சியை வைத்து சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமாகவே நிகழும்.












Click it and Unblock the Notifications