அப்பாவி முஸ்லிம்கள் பலிகடா ஆவார்கள்.. தமிழ்நாடு போலீசில் தீவிரவாத தடுப்பு பிரிவு -எஸ்டிபிஐ எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அனுமதி அளித்திருப்பது மீண்டும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை பலிகடாவாக்கும் நடவடிக்கையாக மட்டுமே அமையும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்து உள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக காவல்துறையில் இருக்கின்ற கட்டமைப்புகளைக் கொண்டே தீவிரவாத நடவடிக்கைகளை, அதுதொடர்பான சதிச் செயல்களை தடுக்க முடியும் என்கிறபோது, புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பது என்பது தேவையற்ற ஒன்றாகும். புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கு பதிலாக காவல்துறையில் இருக்கும் கட்டமைப்புகளை நவீன முறையில் பலப்படுத்துவதன் மூலம் தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக வைத்துக்கொள்ள முடியும்.
ஏற்கனவே இருக்கும் பல விசாரணை அமைப்புகளால் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாகவும் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வந்துள்ளனர். அந்த வகையில் புதிதாக அமைக்கப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவும் அதுபோன்றே செயல்படுமானால் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமே மீண்டும் பலிகடா ஆக்கப்படும் சூழல் உருவாகும்.
மட்டுமின்றி முதல் கட்டமாக இந்த தடுப்பு பிரிவு தொடங்கப்படும் மாவட்டங்களைக் கொண்டே புதிய பிரிவின் செயல்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற அனுமானம் இப்போதே தெரிய வருகின்றது. ஆகவே, தமிழக அரசு, காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்து காவல் துறையின் கட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் பாசிச சக்திகளின் சதிச் செயல்களை தடுக்கும் பிரிவை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications