கிருஷ்ணகிரியில் விளை நிலங்களை பறிப்பதா? ஓலா மீது எஸ்.டி.பி.ஐ. பரபரப்பு புகார்! ஆரம்பமே இப்படியா?
ஓலா நிறுவனம் மீது எஸ்.டி.பி.ஐ. பரபரப்பு புகார்.
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசின் சிப்காட் நிலங்களை தாண்டி, தனி நபர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களை ஓலா நிறுவனம் பறிக்க முயல்வதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசும் ஓலா நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்த புகாரை முன் வைத்துள்ளார் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக்.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
''கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் வளாகத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், போச்சம்பள்ளியை அடுத்த பாராண்டப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களை கேட்டு, நில புரோக்கர்கள் மூலம் ஓலா நிறுவனம் அழுத்தம் தருவதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

1200 ஏக்கர் விவசாய நிலங்கள்
ஏற்கனவே, சிப்காட் அமைப்பதற்காக தங்களின் 1200 ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு அளித்துவிட்டு எஞ்சிய இடங்களில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை நடத்திவரும் தங்களிடமிருந்து நிலத்தை வலுக்கட்டாயமாக வாங்க ஓலா நிறுவனம் புரோக்கர்களை கொண்டு அழுத்தம் தருவதாகவும், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஓலா நிறுவனத்துக்கு ஆதரவாக நில அளவீடு பணிகள் ஆகியவற்றை தங்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக மேற்கொள்வதாகவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

சிப்காட் நிலங்களை தாண்டி
அரசின் சிப்காட் நிலங்களை தாண்டி, தனி நபர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களை ஓலா நிறுவனம் வாங்க எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், இத்தகைய நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஓலா நிறுவனத்தின் ஏகபோக தேவைக்காக விவசாய நிலங்களை பறிக்க முயலும் இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

தன்னிச்சையாக செயல்பட்டு
இந்த விசயத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு விவசாயிகளின் வீடுகளை காலி செய்ய வலியுறுத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஓலா நிறுவனத்தின் துணைத் மேலாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications