மக்களே கவனம்.. சென்னையில் அதிகரிக்கும் பருவகால நோய்கள்.. பாதுகாத்துக்கொள்வது எப்படி?
சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சலால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழைக்காலம் தொடங்கிவிட்டால் பருவ கால நோய்களும் அதிகரித்து வருகின்றன.
தற்போது காணப்படும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை அதாவது வெயில் மழை, பனி என மாறி மாறி காலநிலை அடிக்கடி மாறுபடுவதால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
டெல்லியில் தீவிரமாகும் கொரோனா..மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பு இரட்டிப்பு - 80% பேர் பாதிப்பு
10 நாட்கள் வரை நீடிக்கிறது
குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல், புளூ காய்ச்சல் உள்ளிட்ட பருவ கால நோய்கள் இந்த முறை சற்று கூடுதலாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி ஆகியவையோடு தொண்டை வலியும் அதிகமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் அவதி அடைகின்றனர். சீசனுக்கு வரக்கூடிய இந்த நோய் பாதிப்புகள் 3 நாட்களில் சரியாகி விடும் என்றாலும் தற்போது 10 நாட்கள் வரை நீடிக்கிறதாம்.
நோயாளிகள் கூட்டம் கூட்டமாக..
காய்ச்சல் பாதிப்பு குறைந்தாலும் சளி, உடல் வலி, தொண்டை வலி சரியாவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதால் மக்கள் கடும் பாடு படுகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற பருவகால நோய்களுக்கு சிகிச்சை பெற செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தனியார் மருத்துவமனையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இரவு நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் கூட்டமாக மருத்துவரை பார்க்க காத்திருப்பதை காண முடிகிறது.
வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகம்
இதிலும், சிறு குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சல், சளி பாதிப்பால் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் தற்போது நள்ளிரவு வரை பல கிளினிக்குகள் செயல்படுவதையும் காண முடிகிறது. ஒருபக்கம் மெட்ராஸ் ஐ பாதிப்பும் அதிகமாக உள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி கூறியதாவது:-
கை கழுவும் பழக்கத்தை கைவிட கூடாது
"மழை, பனி காரணமாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பொதுவாக வைரஸ் காய்ச்சல் 2 அல்லது 3 நாட்களில் சரியாகி விடும். ஆனால் தற்போது வர்ம் வைரஸ் காய்ச்சல் முழுமையாக குணம் ஆக 10 நாட்கள் வரை ஆகிறது. எதிர்ப்பு சக்தி குறைந்ததே இதற்கு காரணம். டெங்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் வெளியில் சென்று வந்தால் கை கழுவும் பழக்கத்தை கைவிட கூடாது.
எதனால் பரவுகிறது?
பொது இடங்களுக்கு சென்றால் முகக்கவசம் அணிவது நல்லது. அப்படி அணிந்தால் தொற்று பாதிக்காது. குழந்தைகளுக்கு போட வேண்டிய பல்வேறு தடுப்பூசிகள் போடாமல் இருந்தால் அதனை உடனே போட வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி போடாததால் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது" என்று தெரிவித்தார்.