விடுதலைக்குப் பின்னரும் வதைப்பதா? ‘முருகன் உள்ளிட்டோரை விடிய விடிய அமரவைத்து’ - கொந்தளித்த சீமான்!
சென்னை : 31 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , முருகன் ஆகிய 4 பேரையும் முதல் நாளே திருச்சி சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் இருந்து நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி புலம்பெயர்ந்தோர் முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
176 சிசிடிவி.. 97 சிம் கார்ட்.. அலிபாபா கொள்ளையர்கள்.. மப்டியில் போலீஸ் நடத்திய மாபெரும் ஆபரேஷன்!
6 பேரும் விடுதலை
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக 31 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் சிறைகளுக்கு நேற்று மாலை கிடைத்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
4 பேர் இலங்கை
ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்தும், நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர்களில் நளினி, ரவிச்சந்திரன் தவிர மற்ற 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் 4 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று இரவு திருச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
எங்கே செல்வார்கள்
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும், அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதில், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியர்களைத் திருமணம் செய்துள்ளதால், அவர்கள் தங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கக் கோரலாம் எனக் கூறப்படுகிறது.
முகாமில் அவதி
சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி அகதிகள் முமாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாமல், விடிய விடிய காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. 31 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு விடுதலையான முதல் நாளே மீண்டும் அடைத்து வைத்து ஓய்வெடுக்க விடாமல் வைத்திருந்தததற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடிய விடிய நாற்காலியில்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீமான், "31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
வதைப்பதா?
நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடத்தில் அடைக்காமல் மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது." எனத் தெரிவித்துள்ளார்.