தமிழ் ரத்தம், தஞ்சை வேளாண் மண்டலம், தைப்பூசம் லீவ்.. எடப்பாடிக்கு சீமான் 'ஓஹோ' பாராட்டு-அடுத்து அது?
சென்னை: அதிமுக கூட்டணிக்கு தம்மை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கப்படுத்தி இருந்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நடந்த சந்திப்புகளையும் அப்போது பேசப்பட்ட விவரங்களையும் சீமான் வெளியிட்டுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக அய்யாவை (எடப்பாடி பழனிசாமி) சந்தித்திருக்கிறேன்... அவருகிட்ட எனக்கு பிடிச்சது.. தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கனும்னு சொன்னோம்.. அறிவிச்சார்.. என்னுடைய மூதாதை, என்னுடைய இறை முருகனுடைய தைப் பூசத்துக்கு அரசு பொதுவிடுமுறை விடனும் என்று சொன்னோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கு விடுமுறை இருக்கிறது.. நம்முடைய பாட்டனார் முருகன் தைப்பூசத்துக்கு விடுமுறை இல்லை என்றார்.

எடப்பாடி சாதனைகள்: அப்போது எடப்பாடி பழனிசாமி சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது.. நானே முருக பக்தன்தான், வீட்டுல நிலத்துலகூட முருகன் கோவில் கட்டி இருக்கிறேன். என் பேரே பழனிசாமிதான்.. நான் விடுமுறை அறிவிக்கிறேன் என்றார். அந்த நேரம் சிஏஏ போராட்டம் நடந்தது... அதனால இப்ப நாம விடுமுறை அறிவித்தால் ஒரு மாதிரி தெரியும்..கொஞ்சம் இருங்க என்றார்.. மறுபடியும் விடுமுறையை அறிவித்தார். உங்களுக்கு தெரியும்.. இதுவரை தமிழர் வரலாற்றில் தைப்பூசத்துக்கு தமிழ் இறையோன் முருகன் நாளை அரசு பொதுவிடுமுறையாக அறிவிச்சது அய்யா எடப்பாடி பழனிசாமிதான்.
தமிழ் ரத்தம்: அதனால உணர்வு அடிப்படையில் உறவு அடிப்படையில் ஒரு நெருக்கம் இருக்கு எங்களுக்குள்.. தமிழன் என்கிற ஒரு ரத்த உறவுதான்..வேற என்ன? அப்ப பேசும்போது, கூட்டணி என்கிறது எனக்கு சரிப்பட்டு வராது என சொன்னேன்.. நான் தலைவன் பிரபாகரன் என சொல்வேன்.. அப்ப பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் இருப்பாரா? எழுந்து போயிடுவாரா? அதனால "கூட்டணி" கடினம். இவ்வாறு சீமான் கூறினார்.

கூட்டணி இல்லை: மேலும் அண்ணா திமுகவுடனான கூட்டணி குறித்து என்னை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசினார். அப்போது, கூட்டணிக்கு நான் வர முடியாது. என் கொள்கை முடிவு இதுதான் என எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிவிட்டேன். அது அய்யாவுக்கும் (எடப்பாடி பழனிசாமிக்கும்) புரிந்திருக்கும். 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். 20 ஆண்கள்; 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம் என்றும் சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications