“மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு நம்ம அண்ணன்தான்” : கலாய்த்த அமைச்சர்.. சிரிப்பலையால் குலுங்கிய அவை!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கலைப் பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறை குறித்த மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
Recommended Video
இந்த விவாதத்தின்போது பேசிய மதுரை எம்.எல்.ஏவும் முன்னாள அமைச்சருமான செல்லூர் ராஜூ, "மதுரைக்கு என எந்த பொழுதுபோக்கு அம்சங்களுமே இல்லை. மதுரையில் 20 லட்சம் மக்கள் இருக்கிறோம். பொழுதுபோக்குக்கு ஒரு இடம் கூட இல்லை. எனவே பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பேசினார்.
உடனடியாக அதற்கு எழுத்து பதிலளித்த கலைப் பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜுதான் என்பது நாட்டுக்கே தெரிந்த விஷயம்" எனப் பதில் அளித்தார்.
இதனால் சட்டப்பேரவையில் கட்சி வேறுபாடின்றி உறுப்பினர்களிடையே சிரிப்பலை எழுந்தது. சபாநாயகர் அப்பாவுவும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, "மதுரை ஒரு சுற்றுலா நகரமாக இருந்தாலும் அங்கு பொழுதுபோக்கு இடங்கள் என எதுவும் இல்லை. கீழடி அகழாய்வு நிலையம், சமணர் குகைகள், கோயில்களை பார்வையிட நாள்தோறும் பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் சுற்றுலா வளர்ச்சி பெறும்" என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பதிலளிக்கையில், அமைச்சர் சொல்லும் நல்ல நல்ல யோசனைகள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.