முக ஸ்டாலினின் 30 நாள் ஆட்சி.. சிலருக்கு அதிருப்தி.. சிலருக்கு ஏமாற்றம்.. அதிகாரிகளிடையே சலசலப்பு!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 30 நாட்கள் ஆட்சியின் சாதனைகள் கொண்டாடப்பட்டு வரும் அதேநேரத்தில் அதிகாரிகள் இடம் மாற்ற விவகாரம் கோட்டை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
ஆட்சிகள் மாறும் போது காட்சிகளும் மாறுவது வழக்கம்தான். தற்போது திமுக ஆட்சி அமைந்தது முதலே தொடர்ந்து அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டு வருகின்றனர்.

சபாஷ் நடவடிக்கைகள்
தலைமை செயலாளராக இறையன்பு, முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் நியமனம் ஆகியவற்றுக்காக முதல்வர் ஸ்டாலின் பாராட்டப்பட்டார். மேலும் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் தொடர்ந்து நீடிக்க திமுக அரசு அனுமதித்துள்ளது.

அதிகாரிகள் இடம் மாற்றம்
அதேநேரத்தில் இன்று வரை தொடரும் அதிகாரிகள் இடமாற்றங்களால் கோட்டை வட்டாரங்களில் அதிருப்தி குரல்களும் எதிரொலிக்கின்றன. உதாரணமாக போக்குவரத்து துறை செயலாளராக தாம் நியமிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருக்கிறாராம் கட்டாரியா ஐ.ஏ.எஸ். ஊரகம், ஊராட்சி துறை தமக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த சுகன்தீப்சிங் பேடிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பதவி கொடுத்துவிட்டனர்.

அதிருப்தி சலசலப்பு
தமிழகத்தில் பரவலாக பணியாற்றி விரும்பிய தம்மை சென்னையிலேயே தங்க வைத்துவிட்டனர் என்பதில் சுகன்தீப் சிங் பேடிக்கு லேசான வருத்தம் இருக்கிறதாம். அத்துடன் முதல்வரை நாள்தோறும் சந்தித்து பேசக் கூடிய வாய்ப்புள்ள பதவி கிடைக்கும் என காத்திருந்த ராஜேஷ் லக்கானிக்கு முதல்வரையே சந்திக்க முடியாத மின்சார வாரியத்தின் சேர்மன் பதவி வழங்கப்பட்டதால அவருக்கும் சற்றே மனவருத்தமாம்.

எப்போது சரி செய்வார் முதல்வர்?
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். இப்போது சீனிலேயே இல்லை என்பதும் கோட்டை வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. அதேநேரத்தில் சில அதிகாரிகளுக்கு வெயிட்டான துறை கிடைத்திருப்பதும் கூட லாபியல்தான் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். இந்த அதிருப்திகள், சலசலப்புகள் ஓயும்போதுதான் தற்போதைய அரசின் செயல்பாடுகளும் இன்னும் வேகம் எடுக்கும் என்கின்றனர் சீனியர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications