Exclusive: மகனுக்கு கட்சிப் பதவி.. உடைகிறது மதிமுக-வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தலைவர்கள்!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி என்கிற துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதிமுக அவைத் தலைவரான திருப்பூர் துரைசாமி உட்பட மூத்த தலைவர்கள் பலர் வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது..
திமுகவில் மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக்குவதற்காக தம்மை கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி என்ற குற்றச்சாட்டுடன் 1994-ல் மதிமுகவை தொடங்கினார் வைகோ. திமுகவின் வாரிசு அரசியலுக்கு எதிராக தனிக்கட்சி தொடங்கிய வைகோவுடன் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கை கோர்த்தனர்.
திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டதைக் கண்டித்து இடிமழை உதயன், நொச்சிபட்டி தண்டபாணி உள்ளிட்ட பல தொண்டர்கள் தீக்குளித்து மாண்டனர். காலங்கள் உருண்டோட தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருக்கிறது. திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். வைகோவும் திமுக ஆதரவால் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகி உள்ளார்.
வைகோ மகனுக்கு முக்கிய பொறுப்பு.. மதிமுகவிலிருந்து மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் விலகல்!
துரை வைகோவுக்கு பதவி
இதனால் மதிமுகவின் எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியானது. திமுகவிலேயே மதிமுக இணைக்கப்பட்டுவிடுமா? என்கிற கேள்வி எழுந்தது ஒருபக்கம். இன்னொரு பக்கம் மகன் துரை வைகோவுக்கு மதிமுகவின் தலைமை கழக செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார் வைகோ. இதற்காக சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினார் வைகோ. மொத்தம் 106 பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க 104 பேர் ஆதரவுடன் துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டது.
மூத்த தலைவர்கள் வைகோவுக்கு எதிர்ப்பு
வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுக எனும் கட்சியைத் தொடங்கிய வைகோ, இப்போது அதே மதிமுகவில் தம்முடைய வாரிசுக்கு பதவி கொடுத்திருப்பது அனைத்து தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மதிமுகவிலும் இப்போது துரை வைகோவுக்கு பதவி கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மற்றும் 7 மாவட்ட செயலாளர்கள் நேற்றை கூட்டத்தைப் புறக்கணித்தனர். தற்போதைய நிலையில் மதிமுகவின் பல மூத்த தலைவர்கள் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர் என்றே கூறப்படுகிறது.
வைகோவை எதிர்க்கும் தலைவர்கள் இவர்கள்..
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, நாகர்கோயில் கோட்டார் கோபால்( தணிக்கை குழு உறுப்பினர்), துரை சந்திரசேகரன் (முன்னாள் அமைச்சர் புதுகோட்டை மாவட்ட செயலாளர்), தேனி பொடா அழகுசுந்தரம்( கொள்கை பரப்பு செயலாளர்), வழக்கறிஞர் தேவதாஸ் (வழக்கறிஞர் பிரிவு செயலாளர்), புலவர் செவந்தியப்பன் ( சிவகங்கை மாவட்ட செயலாளர்), மாரியப்பன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர்), டி.ஆர்.ஆர் செங்குட்டுவன் ( திருவள்ளூவர் மாவட்ட செயலாளர்), திருச்சி வீரபாண்டி (வழக்கறிஞர்), ஈஸ்வரன் (இளைஞரணி செயலாளர்), சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்ட செயலாளர்), மோகன் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), ஜெ.ராமலிங்கம் (கடலூர் மாவட்ட செயலாளர்.).
அனைவரும் எதிர்ப்பாளர்களா?
இவர்கள் அனைவருமே நேற்றைய மதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தை வராதவர்கள். இவர்களில் சிலர் தங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என கடிதம் கொடுத்துள்ளனராம். ஒருசிலர் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் பங்கேற்கவில்லை என கூறி வருகின்றனராம். ஆகவே 15 முக்கியஸ்தர்களில் உடல்நலக்குறைவு, மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக கடிதம் கொடுத்தவர்கள், வேறு காரணங்களால் பங்கேற்க முடியாமல் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் என்று முடிவு செய்ய முடியாது. மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் வெளிப்படையாகவே வைகோ மகனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததை எதிர்த்துள்ளார். திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பதாக செய்தியும் வெளியாகியுள்ளது. ஆகவே உறுதியாக கூற முடியாவிட்டாலும் மேலே உள்ள பட்டியலில் சிலர் பகிரங்கமாக தங்களது எதிர்ப்பை விரைவில் தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாரிசு அரசியலை எப்படி ஏற்பது?
தற்போது வைகோவுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் பலர் திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள். பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே திமுகவில் பயணித்தவர்கள். வைகோவை நம்பி அவர் பின்னால் மதிமுகவுக்கு சென்றவர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய மதிமுக அதிருப்தித் தலைவர்கள், வாரிசு அரசியலுக்கு எதிராகத்தானே மதிமுக உதயமானது. திமுகவில் மு.க.ஸ்டாலின் அடுத்த பொறுப்புக்கு வர வேண்டும் என்று பெரும்பான்மையானோர் விரும்பினர். அதனால்தான் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி பதவிகள் வழங்கப்பட்டன. அப்போது பெரும்பான்மையானோர் ஆதரவுடன் ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி வழங்கியதை எதிர்த்து எங்களையும் அழைத்துக் கொண்டு திமுகவை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கியவர் வைகோ. அதே வைகோதான் இன்று பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள்; பெரும்பான்மையினர் ஆதரவு இருக்கிறது என கூறி மகனுக்கு எடுத்த எடுப்பிலேயே தலைமைக் கழக செயலாளர் பதவியை வழங்கி இருக்கிறார். இது எப்படி சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்? எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என கொந்தளிக்கின்றனர்.
விரைவில் அடுத்த நடவடிக்கை?
தற்போதைய நிலையில் மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் தனி அணியாக இயங்குவது என இந்த அதிருப்தி தலைவர்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிருப்தி அணியினர் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்து என்ன செய்வது? என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்கள். கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக மகனுக்கு கட்சிப் பதவி தரப் போய் மதிமுகவே இரண்டாக செங்குத்தாக பிளவுபடும் சூழல் உருவாகி இருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திண்டுக்கல் மா.செ. செல்வராகவன் விளக்கம்
மதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் திண்டுக்கல் செல்வராகவன் பங்கேற்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காதது தொடர்பாக திண்டுக்கல் மா.செ. செல்வராகவனை நமது ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு நாம் பேசினோம், அப்போது, மூலிகை சிகிச்சை பெற்று வருவதால்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக கடிதம் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். அந்த கடிதத்திலேயே துரை வைகோவுக்கு கட்சிப் பொறுப்பு வழங்குவதற்கு ஒப்புதலையும் தெரிவித்து முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என எழுதியும் இருக்கிறேன். வைகோ மகன் துரை வைகோவை வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள், கட்சி கொடியேற்றுதல் என 4 நிகழ்ச்சிகள் அண்மையில் நடத்தி இருக்கிறேன். எங்களுக்கு வழிகாட்டுவதற்கு ஆளுமை மிக்க அடுத்த தலைவராக துரை வைகோவை பார்க்கிறோம். அவருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். துரை வைகோவை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம் என விளக்கம் அளித்தார் செல்வராகவன்.